காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது
அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார்
தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பவை உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள் சங்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டது. சட்டசபை
தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்ஓய்வூதியம் குறித்து ஆய்வு
செய்ய குழு அமைக்கப்படும்என, முதல்வர் ஜெ., உறுதிமொழி அளித்ததால்
ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆய்வு குழு அமைப்பு :
கடந்த பிப்.,28ல் அரசு அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில் 6 பேர் அடங்கிய
ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் ஜூன் 30 வரை ஆய்வு செய்து
அறிக்கை அளிக்க வேண்டும் என, முதல்வர் ஜெ., உத்தரவிட்டிருந்தார்.ஆனால்,
ஜூலை 10 ஆன பின்பும் இதுவரை அறிக்கை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு
புகார் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை
ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண் அடிப்படையில்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் அதில்
கூறியுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட்
கூறியதாவது: முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்யும் ஆய்வு
அறிக்கை சமர்ப்பிக்க 4 மாத காலம் அவகாசம் வழங்கினார். ஆனால், காலம் முடிந்த
நிலையிலும் அந்த ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க வில்லை. எனவே உடனே முதல்வர்
நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.







