சேலம் மாநகராட்சிப் பகுதியில் எம்.ஜி.ஆர். சத்துணவுத்
திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் காலியாக உள்ள எம்.ஜி.ஆர். சத்துணவு
திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளர் (பெண்கள் மட்டும்) 13 பணியிடங்கள்
மற்றும் சமையல் உதவியாளர் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடி
வகுப்பினர் 8- ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்
விண்ணப்பிக்கலாம்.
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவு மற்றும்
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 5- ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத படிக்கத் தெரிந்தால்
போதுமானது.
சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு பொதுப் பிரிவு
மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 40 வயது வரையும்,
பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயது வரையும், விதவை மற்றும் கணவரால்
கைவிடப்பட்டவர்கள் 20 வயது முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் சத்துணவு மையத்துக்கும், குடியிருப்புக்கும் 3 கி.மீ. தூரம் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் சமையல் பணியை மேற்கொள்ளும் உடல் தகுதியோடு இருத்தல்
அவசியமாகும். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 ஆம் தேதி முதல்
ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி
வரை மாநகராட்சி மைய அலுவலக சத்துணவு பிரிவில் வழங்கப்படும்.
நிறைவு செய்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 8- ஆம் தேதி மாலை 4 மணிக்குள்
மாநகராட்சி மைய அலுவலக சத்துணவு பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
பெற்றுக் கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு, மாநகராட்சி மைய அலுவலக சத்துணவு பிரிவில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







