முதல்வரின் மாநில இளைஞர் விருது, இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேருக்கு
வழங்கப்பட்டது. புதிய பொருட்கள் கண்டுபிடிப்பிற்காக, நாகர்கோவிலை அடுத்த,
பெருவிளை கிராமத்தைச் சேர்ந்த மாஷா நசீம்; தெரு நாடகங்கள் மூலம்
விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, மதுரை மாவட்டம், பெத்தானியாபுரத்தை
சேர்ந்த அபர்ணாவுக்கும், முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் கிடைத்தன.
ஆண்கள்
பிரிவில், வெள்ள மீட்பில் ஈடுபட்டதற்காக சென்னை, எழும்பூரை சேர்ந்த ரூபன்
சந்தோஷ்; திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோதைமங்களத்தைச் சேர்ந்த
முகமது ரபீக்கிற்கும் விருதுகள் கிடைத்தன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக, மதுரை, செல்லுாரைச் சேர்ந்த சரவணகுமாருக்கும் இந்த
விருது கிடைத்தது.
முதல்வர் ஜெயலலிதா, 50 ஆயிரம் ரூபாய் காசோலை, பதக்கம், சான்றிதழ் கொண்ட விருதுகளை, ஐந்து பேருக்கும் வழங்கி, பாராட்டினார்.
'ஊக்கம்
அளிக்கும்' :நெருப்பின்றி அரக்கிற்கு சீல் வைக்கும் கருவி, ஹைடெக் ரயில்
டாய்லெட் உட்பட, 14 புதிய தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்துள்ளேன்.
இதற்காக, ஐந்து தேசிய விருது, இரண்டு சர்வதேச விருது பெற்றுள்ளேன். முதன்
முறையாக, சொந்த மாநிலத்தில் விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.
எம்.டெக்., படித்துள்ளேன். மாஷா ஆய்வு திறன் மையத்தை துவக்கி, புதிய
கண்டுபிடிப்புகளை கண்டறிய மாணவ, மாணவியருக்கு உதவுகிறேன். என் மையம் மூலம்,
ஆறு பேர் தேசிய விருது பெற்றுள்ளனர். மேலும் சிறப்பாக செயல்பட, இந்த
விருது எனக்கு ஊக்கம் அளிக்கும்.
மாஷா நசீம், விருது பெற்றவர்
ஆதரவற்ற பெண்களுக்காக...
நேரு
யுவகேந்திராவின் கீழ், பட்டாம் பூச்சி இளைஞர் மன்றத்தை உருவாக்கி, அதன்
செயலராக உள்ளேன். குடிசைப்பகுதி மக்களிடம் சுற்றுச்சூழல், சுகாதாரம், சாலை
பாதுகாப்பு குறித்து, தெரு நாடகங்கள் வழியாக விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்கு, இந்த விருது தரப்பட்டு உள்ளது.
முதல்வரிடம் விருது பெற்றதில் மகிழ்ச்சி. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக இல்லம் துவங்கி, அவர்களுக்கு கைத்தொழில்
கற்றுத்தர திட்டமிட்டு உள்ளேன்.
அபர்ணா, விருது பெற்றவர்