திருமணம் ஆகி, மனைவி, குழந்தை என்று செட்டில்ஆகி… பிள்ளைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும் நேரத்தில் குடும்பத் தலைவனை இழப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது. அதுவும், அந்த குடும்பத் தலைவனின் வருவாயை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் எனில் அவர்கள் நிலை இன்னும் படுமோசமாகிவிடுகிறது.
மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட தவறான வாழ்க்கைமுறை காரணமாக, இளம் வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் தலைதூக்குகின்றன. அதனுடன், மது, சிகரெட் பழக்கம் சேரும்போது நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் செயல்இழப்பு என்று வேறுவகையான பிரச்னைகள் வருகின்றன. எனவே, நாம் சார்ந்திருக்கும் சூழலைப் புரிந்துகொண்டு, நம் உடல்நலத்தை அவ்வப்போது சுயபரிசோதனை செய்துகொள்வது அத்தியாவசியமானது. அப்படி, 40 வயதைக் கடந்த ஆண்கள் கட்டாயம் செய்து கொள்ளவேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் என்னென்ன?
கொலஸ்ட்ரால் பரிசோதனை இதய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழி. ஒவ்வொருவரும், குறைந்தது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்துகொள்வது நலம். அதிலும் 40 வயதை ஒருவர் எட்டிவிட்டால், நிச்சயம் அவ்வப்போது கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அதிக கொலஸ்ட்ரால் நிலை உள்ளவர்கள் மற்றும் டயாபடீஸ், இதயநோய், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த கொலஸ்ட்ரால் சோதனையைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
🌷சர்க்கரை அளவு
ஆசியர்களைப் பொறுத்தவரையில், பாடி மாஸ் இன்டெக்ஸ் (பி.எம்.ஐ) 23-க்கும் அதிகமாக இருந்தால், அவர்கள் அதிக உடல் எடை எண் கொண்டவர்கள் என வரையறுக்கப்படுகின்றனர். குறைந்த வயதில் அதிக உடல் பளு எண் (பி.எம்.ஐ) இருக்குமானால், முன்னெச்சரிக்கையாக இருப்பதன்மூலம், வர இருக்கும் நோய்களிலிருந்து தப்பலாம். அதிலும், 45 வயதைக் கடந்தவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை அளவு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதே போல், ரத்த அழுத்தம் 135/80-ல் இருப்பவர்களுக்கு டயாபடீஸ் வர, அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவர்களும் இது தொடர்பான மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மூன்று மாதத்துக்கு ஒருமுறை எச்.பி.ஏ.1.சி பரிசோதனை செய்ய வேண்டும்.
🌷ரத்த அழுத்தம்
40 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் அவ்வப்போது ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மனிதனுடைய ரத்த அழுத்தத்தை இதயம் சுருங்குவதிலிருந்தும், விரிவடைவதிலிருந்தும் கணக்கிடுவார்கள். சராசரியாக 120/80 என்ற அளவில் இருப்பதே இயல்பு நிலை. அதுவே ஒருவருக்கு140/90-க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். வருடத்திற்கு ஒருமுறை இதயத்திற்கு எக்கோ டெஸ்ட் எடுக்க வேண்டும்.
🌷பல் பரிசோதனை
ஆண்டுக்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ பற்களைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பரிசோதித்தல் ஆகிய விஷயங்களுக்காக பல் மருத்துவரை அணுகுவது பற்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் செயலாகும்.
🌷கண் பரிசோதனை
கண்களில் எந்தவித பாதிப்பும் இல்லையெனினும், 40 முதல் 54 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 55 வயதிலிருந்து 64 வயதுக்குள் இருப்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் கண்பரிசோதனை செய்துகொள்வது நல்லது.கண்களில் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் குளுக்கோமாவில் பிரச்னை இருப்பவர்கள், தகுந்த கண் மருத்துவரை அணுகி, கண்பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம்
.
🌷சிறுநீரகம், கல்லீரல் செயல்திறன் பரிசோதனை
40 வயதைக் கடந்தவர்கள் மருத்துவர் பரிந்துரைபடி, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறுநீரகம், கல்லீரல் செயல்திறன் பரிசோதனை செய்ய வேண்டும். மது அருந்துபவராக இருந்தால், கட்டாயம் கல்லீரல் செயல்திறன் பரிசோதனையை ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். இது எளிய ரத்த பரிசோதனைதான்.
🌷ஆஸ்டியோபொரோசிஸ் பரிசோதனை
50-வயதிலிருந்து 70-வயதுக்குள் இருப்பவர்களுக்கு, எலும்பு மஜ்ஜைகளில், மூட்டுக்களில் வலி ஏற்படுமானால், எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், குறைந்த உடல் எடை கொண்டவர்கள், புகைப்பழக்கம், மது பழக்கம் உள்ளவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட, எலும்பு முறிவு ஏற்பட்ட அல்லது பரம்பரை எலும்பு சார்ந்த நோய் உள்ளவர்கள், இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்வது அவசியம்.
🌷ப்ராஸ்டேட் புற்றுநோய்ப் பரிசோதனை
பெரும்பாலும் 50 வயதைக் கடந்த ஆண்களுக்கு வரக்கூடியது ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய். இவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும். இதை எளிய ரத்த பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். இதை ஆண்டுக்கு ஒரு முறை செய்யலாம்.
🌷பெருங்குடல் புற்றுநோய்ப் பரிசோதனை
50 வயதுக்குக் கீழே உள்ள ஆண்களுக்கு அடிக்கடி ‘குடல் அழற்சி’ ஏற்பட்டாலோ அல்லது அவர்களது மூதாதையர்களுக்குக் ‘குடல் அழற்சி’ இருந்திருந்தாலோ, நிச்சயம் பெருங்குடல் புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதுவே, 50 வயதிலிருந்து 75 வயதுக்கு உட்பட்டவர்கள் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால், கீழ்க்காணும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம் மற்றும் மலப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிக்மோடோஸ்கோப்பி (sigmoidoscopy) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பெருங்குடல் புண் அல்லது கட்டி இருப்பவர்கள், பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்கள் அடிக்கடி ‘காலனோஸ்கோப்பி’ (Colonoscopy) எடுத்துப் பார்த்து சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.
🌷மாஸ்டர் ஹெல்த் செக்அப்
தனித்தனியாக இந்த பரிசோதனைகளை செய்வதற்கு பதில், இவை அனைத்தையும் அளிக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்அப் வருடத்திற்கு ஒருமுறை செய்துகொள்ளலாம்.
--
என்றும் உங்கள் நலனில்
அன்புடன்-து.ராமராஜ்🙏








