அரசு கல்லுாரி மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சி திட்டத்திற்கு,
பயிற்றுனர் கிடைக்காததால், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு
கல்லுாரி மாணவர்களில், இறுதி ஆண்டு படிப்போருக்கு, பணியில் சேர வசதியாக,
சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது; இதன்படி, 30 அரசு கல்லுாரிகளில்,
ஆண்டுக்கு, 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல், கூடுதலாக, 32
கல்லுாரிகளில் பயிற்சி அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது; இதற்காக, ஒவ்வொரு
கல்லுாரிக்கும் ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் வீதம், 1.44 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மென் திறன் பயிற்சி வழங்க,
பயிற்றுனர்கள் இல்லாத குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சி அளித்து வந்த
தனியார் நிறுவனங்களுடன், ஒப்பந்தத்தை நீட்டிக்காததால், இந்நிலைமை
ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில், நேற்று
முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மன்றத்தின் உறுப்பினர் செயலரான,
கல்லுாரி கல்வி இணை இயக்குனர், சேகர் பங்கேற்கவில்லை; நந்தனம் கல்லுாரி
முதல்வர், அமுதா பாண்டியன், மென் திறன் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்
பிரீத்தி பங்கேற்றனர்.அப்போது, அரசு ஒதுக்கிய நிதியில்,
குறிப்பிட்ட தொகையை கல்லுாரிகளுக்கு அளித்து விடுவதாகவும், கல்லுாரிகளே
பயிற்சியாளரை நியமித்து, மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்படியும் ஆலோசனை
தெரிவித்தனர். ஆனால், 'எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், மென் திறன்
பயிற்சி திட்டத்தை செயல்படுத்த முடியாது; பயிற்சியாளர்களை நியமிப்பதுடன்,
அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்' என, கல்லுாரிகள்
தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, எந்த முடிவும் சொல்லாமல்,
கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.







