மகப்பேறு விடுப்பு கால நீட்டிப்புக்கான அரசாணையை, விரைவில் வெளியிட, அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், பெண் அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, மூன்று மாதமாக இருந்த, மகப்பேறு கால
விடுப்பு, 2011ல், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆறு மாதங்களாக
நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 'மகப்பேறு விடுப்பு காலம், ஒன்பது
மாதங்களாக உயர்த்தப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.இதற்கு, இன்னும் அரசாணை வெளியிடாததால், இந்த நடைமுறை
எப்போது, செயல்பாட்டுக்கு வரும் என, அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள்
குழப்பத்தில் உள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பி. பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில்,
''ஒன்பது மாத மகப்பேறு விடுப்பை, முதல்வர் அறிவித்து, ஒரு மாதம்
ஆகிவிட்டது. அரசாணையை வெளியிட்டால், மகப்பேறு விடுப்பில் உள்ளோர், இன்னும்
சில மாதங்கள் வீட்டில் இருந்து, தங்கள் குழந்தைகளை வளர்க்க, உதவியாக
இருக்கும்,'' என்றார்.