பத்து ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்குவது
குறித்து, தனியார் பள்ளிகள் தனித்தனியாக விண்ணப்பிக்க, மெட்ரிக்
இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.அரசு உதவிபெறும் தனியார் மெட்ரிக் மற்றும்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம், அங்கீகாரம்
வழங்குகிறது.
புதிய பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு ஒருமுறையும், மூன்று
ஆண்டுகள் கடந்த பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அங்கீகாரம்
தரப்படும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, உள்கட்டமைப்பு
வசதிகளின் படி, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளாக,
நிரந்தர அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.பள்ளிகளுக்கு, ஓராண்டு
அங்கீகாரம் தரப்படுகிறது; ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இது, தனியார்
பள்ளிகளுக்கு, கடும் அவதியாக உள்ளதால், 10 ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளுக்கு,
நிரந்தர அங்கீகாரம் கோரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார், முதல்வரின்
தனிப்பிரிவுக்கு மனு அளித்தார்.
இந்த மனு, மெட்ரிக் இயக்குனரின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மனுவை பெற்ற
மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மனுதாரருக்கு பதில் அனுப்பி உள்ளார்.
அதில், 'நிரந்தர அங்கீகாரம் தொடர்பாக, தனியார் பள்ளிகள், தனித்தனியாக மனு
செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார். அதனால், அனைத்து தனியார் பள்ளிகளும்,
தனியாக மனு அனுப்ப முடிவு செய்துள்ளன.