தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம்
நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கு வராத
நாட்களிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முழு ஊதியம் பெறுவதாக
கூறப்படுகிறது.
அதனால், ஆசிரியர்களின் பணப்பலன், ஊக்க ஊதிய நிலுவை
தொகை போன்றவற்றை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள்,
உடனடியாக அனுமதிப்பதில்லை.
சில ஏ.இ.இ.ஓ.,க்கள், தாங்கள் ஆசிரியராக இருந்த போது, எந்த
சங்கத்தில் இருந்தனரோ, அதற்கு சாதகமாக செயல்படுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற
விவகாரத்தால், கோவை - சூலுார், புதுக்கோட்டை, அரிமளம், விராலிமலை,
பொன்னமராவதி, காங்கேயம் ஆகிய இடங்களில், ஏ.இ.இ.ஓ., அலுவலக பணியாளர்களை,
ஆசிரியர் சங்கத்தினர் சிறை பிடித்து, போராட்டம் நடத்தியுள்ளனர். கோவையில்
இந்த பிரச்னைக்காக, இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளனர்.
மற்ற மாவட்டங்களில், உயரதிகாரிகளின் விசாரணைக்கு, இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக
அலுவலர்கள் சங்க தலைவர், ராஜேந்திர பிரசாத் மற்றும் பொதுச் செயலர்,
சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:
நிர்வாக பணிகளில், ஏ.இ.இ.ஓ.,க் களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே,
கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அதை சமாளிக்க முடியாத ஆசிரியர்கள்
சிலர், பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அதனால், அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னைக்கு,
அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







