ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள, அரசு,
'இ - சேவை' மையங்களில், ஏப்ரல், 1ம் தேதி முதல், 'கிரெடிட், டெபிட்
கார்டுகள்' மூலம் மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மின் ஆளுமை திட்டத்தில், 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், இ - சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
சாதாரண மக்களுக்கு, குறைந்த செலவில் அரசின் சேவைகள் கிடைப்பதற்காக,
நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், இம்மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில், இணையதளம் வழியாக வருவாய்,
மாநகராட்சி,மின் துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட
சேவைகள், எளிதில் கிடைக்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வரத் துவங்கியதை
தொடர்ந்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை, ஏப்ரல் முதல் அங்கும் கட்டாயமாக்க,
அரசு திட்டமிட்டு உள்ளது.
இதையடுத்து, இ - சேவை மையங்களை நடத்தி வரும்
துறைகளுக்கு, கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கிக் கணக்கு உள்ளவர்கள், மொபைல் போன் வாயிலாக, பணம் செலுத்தும், 'இ -
வாலட்' திட்டம், இ - சேவை மையங்களில், 2016 டிசம்பரில் அறிமுகம்
செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'ஆதார்' கார்டுதாரர்களுக்கு பயன்படும்
வகையில், கைரேகை பதிவு செய்யும், 'பயோமெட்ரிக்' முறையைஅறிமுகம் செய்ய
திட்டமிட்டுள்ளோம். அதற்கான கருவிகளை, சம்பந்தப்பட்ட துறைகள் வாங்க
வேண்டும்.மேலும், பிப்ரவரி முதல், டெபிட் மற்றும்
கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், ரொக்கமாகவும், இ - சேவை மையங்களில் கட்டணம்
செலுத்தலாம். ஆனால், ஏப்ரல் 1ம் தேதி முதல், ரொக்கப்பணம் ஏற்கப்படாது.
டெபிட், கிரெடிட் மற்றும் இ - வாலட் மூலமாக மட்டுமே கட்டணம் பெறப்படும்.
இதற்காக, பி.ஓ.எஸ்., எனப்படும், 'ஸ்வைப் மிஷின்'களை, வங்கிகளுடன்
கலந்தாலோசித்த பின், வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.