தமிழகப் பள்ளிகளில் அமெரிக்க உச்சரிப்புடன்கூடிய ஆங்கிலத்தை அந்நாட்டு
இளைஞர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.ஃபுல்பிரைட் -நேரு கூட்டுறவு
திட்டத்தின் கீழ், இந்தியாவில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முயற்சி 2009-ஆம்
ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதன்படி தில்லி, கொல்கத்தாவைத் தொடர்ந்து 2013
-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது.அதன்
தொடர்ச்சியாக காஞ்சிபுரம், புதுச்சேரியிலும் ஆங்கிலம்
பயிற்றுவிக்கப்படுகிறது.அமெரிக்காவில் இளநிலைக் கல்வியை முடித்த 19
இளைஞர்கள் இந்தியாவில் ஆங்கிலம் பயிற்றுவித்து வருகின்றனர்.
அதில் 6
இளைஞர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர்.இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 9
மாதங்களுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.ஆங்கில
உச்சரிப்புடன்கூடிய பேச்சுப் பயிற்சி, ஆங்கில உரையாடல் மற்றும் ஆங்கில
இலக்கணம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஆங்கிலம்
பயிற்றுவிக்கும் கிரேஸ், சாரா, கேத்ரின், கானர், ஸ்டீபன் ஆகியோர் தங்களின்
அனுபவங்கள்குறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை
தூதகரத்தில்செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:இந்திய மாணவர்கள்
பிரிட்டிஷார் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கே பழக்கப்பட்டுள்ளனர். இதன்
காரணமாக அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தை பயிற்றுவிப்பதில் ஆரம்பத்தில்
சற்று சிரமம் ஏற்பட்டது.அதன்பின்பு பல்வேறு செயல்முறைகள், குறுந்தகடுகளின்
மூலம் பயிற்சி போன்றவற்றின் மூலம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினோம். அதனை
மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.
அனைத்திலும்
முக்கியமாக தமிழர்களின் கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை அமெரிக்கர்களாகிய
நாங்கள் கற்றுக்கொள்வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது.தமிழர்களின்
விருந்தோம்பல் பண்பு எங்களை அதிகம் கவர்ந்துள்ளது என்று அவர்கள்
தெரிவித்தனர்.







