வரும் கல்வி ஆண்டில் திருக்குறள் நன்னெறி பாடத்திட்டம் அமலாகும் என அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் 6ம் வகுப்பு
முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டுமென
ராஜரத்தினம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த
26.4.2016ல் உத்தரவிட்டார்.அதில், கல்வியின் குறிக்கோள் நன்னெறி
கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால்,
திருக்குறளிலுள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டையும்
பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில்,
பள்ளி கல்வித்துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘6
முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் வயது மற்றும் வகுப்பை கணக்கீடு
செய்து, நன்னெறி கல்விக்கான திருக்குறள் பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டு
முதல் நடைமுறைப்படுத்த பள்ளி கல்வித்துறை இயக்குநர்
அறிவுறுத்தப்பட்டார்.அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள 105 அதிகாரங்களை
கொண்ட நன்னெறி கல்வி பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் வகுப்பு
வாரியாக அமல்படுத்தப்படும்’ என உத்தரவிட்டுள்ளார்.