ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வளர்ந்துவிட்ட பிள்ளைகள் செய்யும் வேலைகளை கவனித்துப் பாருங்கள். ஆனால், அது தொடர்பான கருத்துக்களை அவர்கள் செய்து முடித்த பிறகு சொல்லுங்கள். அவர்கள் ஒரு வேலையைத் தொடங்கும்போதே அதில் குறுக்கிடவோ, அவர்களுக்கு முன்முடிவுகளைத் தருவதோ கூடாது.
உங்களுடைய முடிவுகளைச் சொல்லி, அவர்களுடைய முடிவெடுக்கும் திறனைக் குறைக்கிறீர்கள். ஒரு குறுகிய வட்டத்தை விட்டு அவர்களால் வெளியே செல்ல முடியாமல் போகும். அவை அவர்களுடைய மனஅழுத்தத்தை அதிகரிக்கும்.
18 முதல் 25 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 460 பேரைக் கொண்டு, அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களிலிருந்து ஒரு அதிர்ச்சிக்குரிய முடிவு தெரிய வந்தது.
பெற்றோர்களில் குறிப்பாக, அம்மாக்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய முன்முடிவுகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பதால், குழந்தைகள் அந்த வட்டத்தைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். அப்படி செய்வது பெற்றோரின் கருத்துக்களை அவமதிக்கும் செயல் என்று கருதுகிறார்கள்.
அவர்களுடைய விருப்பங்களும், யோசிக்கும் திறனும் முடிவெடுக்கும் திறனும் குறைந்துவிடுகிறது. அது அவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தத்தைத் தருகிறது. சில நேரங்களில், அதுவே அவர்களைப் பெற்றோர்களிடம் இருந்து மனதளவில் விலகியிருக்க வைத்து விடுகிறது.
பெற்றோர்களே உஷார்... நீங்கள் வாழ்க்கையில், சிறப்பாக முடிவெடுக்கும் ஆற்றல் உடையவராக இருந்தால், அதைப்பார்த்து வளரும் பிள்ளைகள், தானாகவே அவற்றைப் பின்பற்றும். பிள்ளைகள் அவர்களுடைய வேலைகளில் முடிவெடுக்கும்போது, ஒருபோதும் தேவையில்லாமல் அதில் நுழைந்து அக்கறை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாமே..









