
ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில்
விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்
செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க-வின் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் எனப் பலர் இந்தக் கூட்டத்தில்
கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் ,
"தற்போது தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் நடந்து கொண்டு
இருக்கிறது. அதன் அடிப்படையில் 11-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கொண்டு
வரப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும்
வகையில், வரும் திங்கள் கிழமையன்று மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்
வழங்கப்படும். இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை
இன்னும் மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்படும். அதற்கான
ஆசிரியர் குழு விரைவில் அமைக்கப்படும்" என்றார்.