உங்க கண்ணு பத்திரம்! ஸ்மார்ட்போன் அபாயம்!
தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது
கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு
தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுமாம். அதன் பெயர் தான் ட்ரான்சியன்ட்
ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ் என்கிறார்கள் மருத்துவர்கள்.
முகத்தின் இடது புறம் தலையணையில் புதைந்திருக்க, வலது கண்ணால் சிரமப்பட்டு
ஸ்மார்ட் ஃபோன் ஸ்கீரீனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதால்
விளையும் விபரீதம் இது. சரியாக உறங்காமல், விடியும் முன்பே விழித்து,
படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனைப் பார்ப்பதை தொடர் பழக்கமாகக்
கொண்டிருப்பவர்களுக்கும் இப்பிரச்னை என்கிறது ஒரு ஆராய்ச்சி.
இரவில் உறங்காமல் ஸ்மார்ட்போனை மேற்சொன்ன விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு
தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்களும் உறுதி
செய்தனர். லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் ஓமர்
மஹ்ரூ கூறுகையில், 'சூரிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்த பின்,
சட்டென்று அறைக்குள் நுழையும் போது, சில கணங்களுக்கு கண் பார்வையே
மங்கலானது போலக் காட்சிகள் தெளிவற்று இருக்கும். எந்தளவுக்கு பளிச்சென்ற
வெளிச்சத்தை நேரடியாக விழித்திரை சந்தித்ததோ, அதே அளவுக்கு சாதாரண
நிலையில் இக்குருட்டுத்தன்மை நீடிக்கும். போலவே, ஸ்மார்ட்போனில்
பளிச்சென்ற ஸ்கீரினில் செய்திகளை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு,
வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது.
சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு
திரும்பிவிடும். ஆனால் இதையே தொடர் பழக்கமாகக் கொண்டிருந்தால் விழித் திரை
பிரச்னைகள் ஏற்பட்டு நிரந்தரமாக பார்வையிழப்பும் ஏற்படலாம்' என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக தொலைக்காட்சி, கம்யூட்டர் மற்றும்
ஸ்மார்ட் போன் என எந்த ஸ்கீரினையும் பார்க்காமல் கண்களை மூடி சற்று நேரம்
ரிலாக்ஸ் செய்துவிட்டு அதன் பின் உறங்கச் சென்றால் நிச்சயம் இந்த பிரச்னை
ஏற்படாது.







