ஆடி பதினெட்டாம் தினத்தின் சிறப்புகள்
ஸ்ரீரங்கத்தில் காவிரி அன்னையை ரங்கநாதரின் உபய நாச்சியாராகக் கருதுகின்றனர். அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமாள் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
காவிரிக்கு சீர் கொடுக்கும் வழக் கம் இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாலை நேரத்தில் காவிரிக்குப் புடவை, காதோலை, கருகமணி, தாலி, வெற்றிலை பாக்கு, பழம் முதலிய மங்கலப் பொருட்களை ஸ்ரீரங்கநாதர் அர்ப்பணிப்பார். இந்தப் புனிதக் காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தில் நவ கன்னியர் களில் ஒருவராக இருக்கும் காவிரியை வழிபட ஆடிப்பெருக்கு விழாவுக்கு பத்து நாட்கள் முன்னதாகவே ஒரு தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகளை முளைக்கச் செய்வர். அவற்றை கும்மிப் பாடல்கள், குலவைப் பாடல்களால் போற்றியபடி காவிரிக்கு எடுத்துச் செல்வர். முதலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு வாழை இலையில் மண்ணிலிருந்து ஒன்பது உருண்டைகள் பிடித்து வைத்து பூஜிப்பார்கள்.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் தென் மேற்குக் கரையில், காவிரி அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு ஆடிப்பெருக்கன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
தஞ்சை - திருவையாறு சாலையில் உள்ள திருவையாற்றில் ஐயனாரப்பன் புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி பதினெட்டில் நடைபெற்று வருகிறது.
கொடுமுடி - மகுடேசுவரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப் பதினெட்டு தினத்தன்று மும்மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் பச்சை மண்ணில் பானை செய்து அதில் மாவிளக்கு, கருகமணி, காதோலை, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியவற்றை வைத்து நடு ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வருவர். அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நடைபெறும்.
ஈரோடு பவானி - கூடுதுறையில் அதி காலையில் நீராடி விட்டு அம்மனுக்குத் தேங்காய், பழம், கருகமணி, காதோலை முதலியவற்றைப் படைத்து ஆராதனை செய்வர்.
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் சித்தப் புருஷர்களும், யோகிகளும் நீராடி தங்கள் தவ வலிமையை மக்களுக்குப் பகிர்ந்தளித்துச் செல்வதாக கருதப்படுகிறது. எனவே அன்று நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.
நீர் நிலைகள் தங்கள் வீட்டிற்கு அருகில் இல்லையென்றால் முறைப்படி வீட்டில் வைத்தே காவிரித் தாயைப் பூஜித்து சமர்ப்பணப் பொருட்களை அருகிலுள்ள கிணறுகளில் போடலாம்.
ஆடிப் பதினெட்டாம் நாளன்று காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு தரும்.









