இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய
விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப
கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில், இன்ஜி., கல்லுாரிகள்
செயல்படுகின்றன.
கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, நுாலக, ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின்
எண்ணிக்கை, கல்வித்தகுதி, கல்லுாரிகளின் இருப்பிடம் ஆகியவற்றின்
அடிப்படையில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், இன்ஜி.,
கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர அமைப்பின் அனுமதி பெற்ற கல்லுாரிகள்
மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அங்கீகாரத்தை புதுப்பிக்கலாம்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரத்தை
புதுப்பிப்பதற்கான விதிகள், நவ., இறுதியில் அல்லது டிச., முதல் வாரத்தில்,
ஏ.ஐ.சி.டி.இ.,யால் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டுக்கான விதிகளில்,
பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு கல்லுாரியும், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம்
ஏற்படுத்த வேண்டும்; தொழிலக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும்; திறன்சார்
பயிற்சிகளை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற விதிகள் இருக்கலாம்.
புதிய விதிகள் குறித்து, உயர்மட்டக் குழு இறுதி ஆய்வு செய்வதாக,
ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்து உள்ளார்.