மணந்தால் மோடியைத்தான்... பெண் போராட்டம்!
ஜெய்ப்பூரை சேர்ந்த 40 வயதுப் பெண் ஒருவர் “மோடியைத் திருமணம்
செய்துகொள்ளும் எண்ணத்தில்” கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தர் பகுதியில்
போராடிவருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற பெண் தனி ஒருவராகக் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி முதல் மோடியின் புகைப்படத்துடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “எனது முதல் திருமண பந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. அந்தப் பந்தம் முறிந்த பிறகு என்னைத் திருமணம் செய்துகொள்ள ஏராளமானோர் முன்வந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. நான் பிரதமர் மோடியைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
நான் பேராசைப்படுவதாக மக்கள் நினைக்கின்றனர். மூளை பாதித்துள்ளதாகச் சிலர் சித்தரிக்கின்றனர். எனவே மோடியைச் சந்திக்க அனுமதி மறுக்கின்றனர்.
பிரதமர் மோடியும் என்னைப் போலவே தனியாக இருக்கிறார். நாட்டிற்கே சேவை செய்யும் அவரைத் திருமணம் செய்துகொண்டு அவருக்குச் சேவை செய்ய விரும்புகிறேன். எனக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அவற்றை விற்றாவது மோடியைப் பார்த்துக்கொள்வேன். பிரதமர் மோடி வந்து என்னைச் சந்திக்கும்வரை என் போராட்டம் தொடரும்” என்று கூறினார்.
இவருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். ஜந்தர் மந்தரில் உள்ள குருத்துவாரா கோயில்களுக்குச் சென்று சாப்பிட்டும், அங்குள்ள பொதுக் கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டும் தனது
வினோதமான போராட்டத்தை சாந்தி தொடர்ந்துவருகிறார்.