கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு
அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி
பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் TET
அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது.
ஆரம்பத்தில் தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்கள் சற்றே தாமதமாக அமலாக்கம்
செய்தன. அதன்படி கடந்த 15-11-2011 அன்று அரசாணை 181 உருவாக்கம் பெற்றது.
ஆனால் அதை தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் முறையாக செயல்படுத்த
பல மாதங்கள் ஆனது.இந்த இடைவெளியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET
நிபந்தனைகள் அப்போது இல்லை.ஆனால் அதன் பின்னர் அதே ஆசிரியர்கள்
அனைவருக்கும் TNTET நிபந்தனைகள் பொருந்தும் எனவும், விரைவில் TETல்
கட்டாயத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர இயலும் என்ற
நிபந்தனைகளில் தள்ளப்பட்டனர்.அன்றிலிருந்து இன்று வரை ஊதியம் மட்டுமே
தரவும், மற்றபணிப்பயன்கள் மறுக்கப்பட்ட நிலையிலும் இந்த நிபந்தனை
ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக இருந்த இந்த வகை TET நிபந்தனை
ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் TETலிருந்து முழுவதும் விலக்கு
கிடைத்தது.தற்போது அரசாணை 181 & 90 போன்றவற்றைத் தாண்டி,
சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழுவதும் விலக்கு
தரப்பட்ட சூழலில் 15-11-2011 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள்
TET எழுத கட்டாயம் என்பதற்கு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளை தடை கொடுத்து உத்தரவிட்டது.ஆயினும் கடந்த மாதம் வெளிவந்த பள்ளிக்கல்வி
இயக்குனரின் செயல்முறைகள் அடிப்படையில் பார்க்கையில் 23-08-2010 பின்னர்
பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்பது மீண்டும் வலியுறுத்தி
உள்ளது தெளிவாகிறது.
இதனிடையே சுமார் 500 க்கும் மேற்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TNTET
லிருந்து முழுவதும் விலக்கு மற்றும் பணிப்பாதுகாப்பு வேண்டி
நீதிமன்றங்களில் வழக்குகள் தொடந்து உள்ளனர்.24-10-17ல் வந்த இந்த
வழக்குகளின் அடுத்த கட்ட வாதம் வரும் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குழப்பங்கள் நிகழும் இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின்
நீதிமன்ற வழக்குகளுக்கான தீர்வு அல்லது வாபஸ் சார்ந்த நெறிகள் விரைவில் வர
வேண்டுமாகில் தமிழக அரசின் கல்வித் துறையின் கருணைப்பார்வைபட்டால் மட்டுமே
யாருக்கும் பாதிப்பு இல்லாத நல்ல தீர்வு ஏற்படும் என்பதே உண்மை.
23-08-2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் சுமார்
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்காமல்இருக்க தமிழக அரசு TNTET லிருந்து முழு விலக்கு கொடுத்து பணிப்
பாதுகாப்பு தந்து விரைந்து அரசாணை வெளிவிட்டு இந்த வழக்குகளை தீர்த்து
வைக்க வேண்டும்என ஆசிரியர் அமைப்புகள் இன்றும் வேண்டுகோள்
விடுத்துவருகின்றன.







