மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களின் மாநில மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களின் மாநில மாநாடு அதன் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமையில்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முக்கியப் பங்கு
வகிக்கின்றன. உயர்கல்விக்கு இந்த இரு வகுப்புகள் அடித்தளமாக இருக்கும்.
எனவே மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தவும்,
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் மேல்நிலைப்
பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்கப்பட வேண்டும். கிராமப்புற
மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு
வழங்கப்படும் 14 நலத்திட்டங்களை செம்மைப்படுத்தவும், கற்றல்- கற்பித்தல்
பணிகளை திறம்படச் செய்யவும் நலத்திட்ட அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட
வேண்டும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை
மீண்டும் அமல்படுத்த வேண்டும்.எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய
முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதியுடைய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர்
பதவி உயர்வு வழங்க வேண்டும். பொருளியல், வணிகவியல் காலிப்பணியிடங்கள் 100
சதவீதம் நேரடி நியமனம் மூலம்மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்பட
பல்வேறுதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.







