புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை கடைசி நாள்
என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அவகாசம் வழங்க,பல தரப்பில்
கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை,
பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 14 ஆண்டுகள்; 10ம் வகுப்பு வரை, ஏழு
ஆண்டுகளுக்குப்பின், பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்காக, பள்ளிக்கல்வி
துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவுப்படி, துறை செயலர், உதயசந்திரன்
மேற்பார்வையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர், அறிவொளி ஒருங்கிணைப்பில், புதிய பாடத்திட்ட வரைவு
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை, நவ., 20ல்,முதல்வர்
பழனிசாமியால் வெளியிடப்பட்டது. நவ., 21ல், tnscert.org என்ற இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட்டது.இதில், பாடத்திட்ட நோக்கம், தயாரித்த முறை,
பாடங்களின் வகைகள், பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் போன்றவை,
தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என,
அனைத்து தரப்பினரும் கருத்துகளை தெரிவிக்கலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அவகாசம், நாளை முடிகிறது. அதே நேரம்,
பாடத்திட்டம் குறித்து கருத்து கூற, இன்னும் ஒரு வாரம் வரை கூடுதல் அவகாசம்
வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.







