பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு,
கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ -
மாணவியருக்கு, பல்வேறு நலத் திட்டங்கள் அமலில் உள்ளன.மாணவ - மாணவியர் நீண்ட
நேரம், 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க, உடற்கல்வி மற்றும்
விளையாட்டுகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா
பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தினமும் மாலை நேரங்களில், யோகா
வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டமான,
எஸ்.எஸ்.ஏ.,வில், மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும், ஒன்றரை மணி நேரம் கராத்தே வகுப்பு நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, இலவச
கராத்தே வகுப்புகள் துவங்கிஉள்ளன. மாவட்டங்களில், வாரத்திற்கு இரண்டு
நாட்கள், மாலையில் கராத்தே பயிற்சி அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.'சில்மிஷத்தில் ஈடுபட முயற்சிக்கும் மாணவர்கள்
மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து, தற்காத்து கொள்ள, மாணவியருக்கு கராத்தே
பயிற்சி பலன் அளிக்கும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.







