தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,
குரூப் - 4 தேர்வில், பொதுபிரிவினராக, வெளிமாநிலத்தவர் பங்கேற்க விதி
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், மற்ற
மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில், அறிவிக்கையில் திருத்தம்
செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தவறானது.
வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில
மற்றும்சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,
1955 முதல் அமலில் உள்ளது.
இவ்விதி, தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான பணி நிபந்தனைகள் சட்டம், 2016,
பிரிவு, 20 மற்றும், 21ல்,இடம்பெற்றுள்ளது. இதில், எந்த மாற்றமும் இன்றி,
தேர்வாணையத்தால், நேரடி நியமனத்திற்கான அனைத்து பதவிகளுக்கும்
பின்பற்றப்படுகிறது. வெளிமாநிலத்தவர், பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால்,
தமிழக விண்ணப்பதாரர்களுக்கான இட ஒதுக்கீட்டில், எந்த பாதிப்பும், மாற்றமும்
இல்லை.இவ்விதிகளையே, குரூப் - 4 அறிக்கையிலும் கூறியுள்ளோம்.
பிற மாநிலங்களிலும், இந்த விதிகள் பின்பற்றப்படுகின்றன. மூன்று ஆண்டுகளில்,
66 போட்டி தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு உள்ளன. அவற்றில், 30
ஆயிரத்து, 98 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில், 11 பேர் மட்டுமே
பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







