பொதுத் துறை வங்கிகள் எதையும் மூடும் திட்டம் இல்லை என்றும், அது குறித்து
வெளியான தகவல்கள் செய்தியல்ல, புரளியே எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம்
அளித்துள்ளது.
பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளை மூட
ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாக கடந்த ஒரு வாரமாக சமூக தளங்களில்
செய்தி பரவி வருகிறது.
இது குறித்து ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ்
பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், வாராக்கடன்
அதிகரித்து, சில பொதுத் துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால்,
அதுபோன்ற வங்கிகளை, ‘வங்கிகள் சீரமைப்பு நடவடிக்கை’யின் கீழ் மூட
திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் தகவல் பரவி
வருகிறது.
சில ஊடகங்கள் மற்றும் சமூகத் தளங்களில் வெளியாகியிருப்பதை
போல, வங்கிகளை மூடும் திட்டம் என்பது செய்தியே அல்ல. அது புரளிதான் எனவும்
ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மேலும், மாநில
வங்கிகளின் பலத்தை அதிகரிக்கும் வகையில் சில வங்கிகளை மூடுவதாகக்
கூறுப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. வங்கிகளை மூடுவது என்ற வாதமே
எழவில்லை. இதுபோன்ற எந்த வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
நஷ்டத்தில்
இயங்கும் வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, அதனை
லாபம் பெறும் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டத்தைத் தான் மத்திய அரசு
செயல்படுத்தி வருகிறது. பொதுத் துறை வங்கிகளை பலப்படுத்துவதற்கான அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வங்கிகளை மூடும் பேச்சுக்கே
இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







