மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு மையங்களில், தங்கம்
அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தாலியை கழற்றிவிட்டு பெண்
டாக்டர்கள் தேர்வு எழுதினர்.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ்
பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார்
23,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000
இடங்கள்இருக்கின்றன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்
(NEET - நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய
தேர்வுகள் வாரியம்நடத்தும் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான
நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்31-ம்
தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்தது.நாடுமுழுவதும்
எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பணியாற்றி வரும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட
டாக்டர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.தமிழகத்தில் இருந்து மட்டும்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 20,000-க்கும் மேற்பட்ட
டாக்டர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் நாடுமுழுவதும் நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட
நாடுமுழுவதும் 120-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்த நீட் தேர்வில்
டாக்டர்கள் பங்கேற்று எழுதினர். காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை
மூன்றரை மணி நேரம் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன், புளூடூத், நோட்புக், பேனா, கைப்பை
உள்ளிட்ட எதையும் எடுத்து வரக்கூடாது. கம்மல், வாட்ச், பிரேஸ்லெட், பெல்ட்
போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகளை தேசிய
தேர்வுகள் வாரியம் விதித்திருந்தது. சில இடங்களில் தாலி அணிந்து வந்த பெண்
டாக்டர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுத்தனர். அதனால்தாலியை கழற்றி
வைத்துவிட்டு பெண் டாக்டர்கள் தேர்வு எழுதச் சென்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர்
டாக்டர் கோபிநாத் கூறும்போது, “மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு கடந்த
ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது தாலியுடன் வந்த பெண் டாக்டர்களுக்கு தேர்வு
எழுத அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தாலியை கழற்றிவிட்டுத்தான் அவர்கள்
தேர்வு எழுதச் சென்றனர். இதுபற்றி தேசிய தேர்வுகள் வாரியத்திடம் புகார்
செய்தோம். அடுத்த முறைஇதுபோல் நடக்காது என்றனர்.
தாலி அணிந்து வரும் பெண்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற
உறுதிமொழியை கொடுத்தனர். ஆனால், இந்த ஆண்டு சென்னை, திருச்சி, சேலம்
நகரங்களில் சில தேர்வு மையங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் தாலியை
கழற்றிவிட்டு பெண் டாக்டர்கள் தேர்வு எழுதச் சென்றுள்ளனர். தேர்வு எழுத
வந்த பெண் டாக்டர்களை தாலியை கழற்றச் சொல்வது கண்டிக்கத்தக்கது” என்றார்.







