
ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் தொடர் மறியல் போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று
பாடை கட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலை மறியலில்
ஈடுபட்டிருந்த நிலையில், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று
கைது செய்தனர்.
பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் கடந்த 7
ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த
ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்
நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாக்டோ -ஜியோ அமைப்பை
சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடைவிதித்தது. தமிழக
தலைமை செயலாளர் ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி
பிரச்னைக்கு சுமுக தீர்வு காண அறிவுறுத்தியது. ஆனால், அரசுத் தரப்பில்
ஜாக்டோ -ஜியோ முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால் பிப்ரவரி 21ம்
தேதி முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நிர்வாகிகள்
அறிவித்தனர்.
சிபிஎஸ் பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தையே மீண்டும்
அமல்படுத்த வேண்டும், 7வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையிலான 21
மாத சம்பள நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடுகளை உடனே களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு
பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியம்
வழங்க வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல்
போராட்டம் நடத்தி வருகின்றனர். 4வது நாளாக, நேற்று காலை 10 மணியளவில்
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக்டோ
-ஜியோ அமைப்பினர் ஒன்று கூடினர். ஜாக்டோ -ஜியோவுக்கு உட்பட்ட அரசு ஊழியர்
சங்கங்களின் பெண் ஊழியர்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
நூதன முறையில் பாடை கட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. பாடையில் அரசு ஊழியர்
ஒருவரை படுக்க வைத்து பிணம் போல் தூக்கி வந்தனர், பாடையில் படுத்திருந்த
நபரின் மீது ‘‘பணி ஓய்வுக்குபின் சிபிஎஸ் ஊழியரின் நிலை அனாதை பிணம்’’ என்ற
பதாகை வைக்கப்பட்டிருந்தது. அவரை சுற்றி அரசு ஊழியர்கள் ஒப்பாரி வைத்தபடி
பாடையை தூக்கி வந்தனர். இதனால் அங்கு அதிக எண்ணிக்கையில் போலீசார்
குவிக்கப்பட்டனர்.வாலாஜா சாலையின் ஒரு பகுதியில் அமர்ந்தும் ஜாக்டோ- ஜியோ
அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டது. இதனால் அந்த பாதையை மூடி போக்குவரத்தை மாற்று சாலைகளில்
போலீசார் திருப்பி விட்டனர்.
கடந்த 3 நாட்களாக அரசு, தங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாததால் ஆத்திரம்
அடைந்த ஊழியர்கள் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராடப்போவதாக அறிவித்தனர்.
அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். மாலையில் கலைவாணர் அரங்கில் பிரதமர்
கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இருப்பதால் போராட்டத்தை முடித்துக்கொள்ள போலீசார்
அறிவுறுத்தினர். ஆனால், தொடர் போராட்டம் நடத்தும் திட்டத்தில் மாற்றம்
இல்லை என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பிற்பகல் 1 மணியளவில்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது
செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ராஜரத்தினம்
மைதானத்தில் வைத்தனர், பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர்.
துறை செயலாளர்கள் தேவையில்லை
போராட்டத்தின்போது, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தமிழ்செல்வி
கூறுகையில், ‘முதல்வர், துணை முதல்வர் எங்களை வந்து சந்திக்க வேண்டும்.
அதேபோல், அரசு ஊழியர்களுக்கு உதவாத, நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைக்காத
துறை செயலாளர்கள் எங்களுக்கு தேவையில்லை. போராட்ட குழுவினருடன் பேசுவதற்கு
ஒன்றுமில்லை என்று அரசுத் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், எங்கள்
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.