துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் அரசின் கடன் அதிகரித்தபடி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் அல்லது இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்நிலையில், வரும் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 15-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.








