பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இடைநிலை ஆசிரியர்
மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு
அறிவித்தது. இதன்படி கடந்த 2012, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில்
தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அக்.6 மற்றும் 7ம் தேதிகளில்
தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த
தகுதித்தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பாடத்திற்கு தொடர்பில்லாத
வகையில் வினாக்கள் இருந்தன.
தாள் 2 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு
வினா கேட்கப்படும். இந்த வினாக்களை தமிழ், ஆங்கிலம், சைக்காலஜி, கணிதம்,
அறிவியல் (அ) சமூக அறிவியல் என 5 வகையாக பிரித்து ஒரு பிரிவிற்கு 30
மதிப்பெண் அளிக்கின்றனர். எந்த பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து
பட்டப்படிப்பு முடித்தனரோ அதிலிருந்து வெறும் 30 கேள்விகள் மட்டுமே
கேட்கப்படுகிறது.
2012 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் கணித பாடத்திலிருந்து 20 கேள்விகள்
மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. இதனால் கணித ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளில் மொத்தமுள்ள 150 கேள்விகளில் 110
கேள்விகள் முதன்மை பாடத்திலிருந்து கேட்கப்படுகிறது.
எஞ்சியவை மட்டுமே பொதுவான வினாவாக கேட்கப்படும். எனவே பட்டதாரி
ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள்
அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் கூறுகையில், ‘‘ஒருவர் எந்த பாடத்திற்கு ஆசிரியராக நியமனம்
செய்யப்பட உள்ளாரோ அதில் தேர்வு வைத்து, தகுதியுள்ளவரா இல்லையா என முடிவு
செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகள் அந்த வகையில்தான்
நடக்கும். ஆனால் தகுதித்தேர்வில் மட்டும் மாறுபட்ட முறையில் வினாக்கள்
கேட்கும் முறை உள்ளது. எனவே போட்டித்தேர்வுகளை போல் பாடப்பிரிவுகள்
அடிப்படையில் தேர்வு நடத்த நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.