பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக
கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை
நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வினை 1
லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 2200 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் இந்த தேர்வு முடிவில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் மேலும்
வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் மோசடி நடந்து இருப்பதாகவும், ஆசிரியர் தேர்வு
வாரிய உறுப்பினர் செயலாளர் உமா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 156
பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர் சுப்பிரமணியனை தேடி வந்த
நிலையில் அவர் தலைமறைவானார். 3 மாதங்களாக சுப்பிரமணியன் தலைமறைவாக உள்ள
நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு
போலீசார் கூறியுள்ளனர். அதேபோல் டே்ட்டா என்ட்ரி ஊழியர்களுடன் சேர்ந்து
மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். முக்கிய
ஆவணங்களுடன் ராஜேஷ் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடு வழக்கில்
156 பேர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தரகர்கள், டேட்டா எண்ட்ரி நிறுவன ஊழியர்கள் என இதுவரை 8 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் விரைவில் கைது செய்யவில்லை எனில் வழக்கு
சிபிஐக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







