பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள்
வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத்
துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒரு வருவாய்
மாவட்டத்துக்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் மதிப்பீடு முகாம்களில்,
ஆசிரியர்கள் தங்களின் கல்வி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கல்வி
மாவட்டத்தில் உள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால்,
விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப்படலாம்.
அந்தக் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாமில் விடைத்தாள் திருத்தும்
பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், மதிப்பீட்டுப் பணி
முடிவடைந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி
முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை குறித்த
தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என
அதில் கூறப்பட்டுள்ளது .







