பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்திய,
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் செயலை, மத்திய கணக்கு
தணிக்கை அலுவலகம், கடுமையாக கண்டித்து உள்ளது.
பரிசீலனை:
சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்,
ஜூனுக்குள், இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.இது தொடர்பான
பரிசீலனை, ஆய்வுகளை, ஆறு மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்பது விதி.
கடந்தாண்டு, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வேண்டி, 203 பள்ளிகள் விண்ணப்பித்து
இருந்தன; இவற்றில், 140 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவற்றில்,
19 பள்ளிகளுக்கு மட்டும், ஆறு மாதத்திற்குள் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மீதமுள்ள பள்ளிகளுக்கு, மிகவும் தாமதமாக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக,
சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு:
மேலும், 58 பள்ளிகள், இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான அங்கீகார
உயர்வுக்கு விண்ணப்பித்து இருந்தன. இந்த பள்ளிகளில், அந்த வகுப்புகள்
செயல்படத் துவங்கிய பின், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் வழங்கி உள்ளது.
மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில், சி.பி.எஸ்.இ.,
அலட்சியம் காட்டி வருவதாகவும், சி.ஏ.ஜி., கண்டனம் தெரிவித்துள்ளது.







