புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில்
குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை
தெரிவித்தார்.
கரூர்
நகராட்சிக்கு உள்பட்ட 46-வது வார்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களிடம்
இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
ஜெயலலிதாவை பொறுத்தவரை மத்தியில் உள்ள ஆட்சியை, கட்சியை என்றும்
நம்பவில்லை. நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை.
ஜெயலிலதா உயிரோடு இருக்கும்போது எடுத்த முயற்சியால் காவிரி பிரச்னை
விரைவில் தீரும். இதற்கான முழுப் பெருமையும் ஜெயலலிதாவையும், அதிமுகவையும்
சேரும்.
இப்போது சிலர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகக்
கூறுகிறார்கள். வெற்றிடம் என்பது கிடையாது. அரசியலில் தலைவர்கள்
மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியானது ஆட்சி நடத்திக் கொண்டுதான்
இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சியை தவிர பிறகு தொடர்ந்து
திராவிடக் கட்சிகள் தான் ஆளுகின்றன.
புதிய பென்ஷன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு ஆதரவு
கொடுக்கவில்லை. ஆனால் திட்டம் வந்துவிட்டது என்றால் அரசு செயல்படுத்த
வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதற்கு
எதிராகக் குரல் கொடுப்போம் என்றார்.
பேட்டியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனிருந்தார்.








