நாடு முழுவதும் உள்ள 70 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், 12 அரசு
மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை
விதித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தரம், இட வசதி உள்ளிட்ட
கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது.
இதில் 70 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 12 அரசு மருத்துவக்
கல்லூரிகள் என 82 மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும்,
உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமலும் இருந்தது தெரியவந்தது. இதனால் இந்திய
மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கைக்கான தடை உத்தரவைப் பிறப்பித்ததாக மத்திய சுகாதாரத் துறை
தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்த காரணத்தினால்,
நாட்டில் மொத்தமுள்ள 64 ஆயிரம் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பத்தாயிரம்
இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது.
இதேபோன்று புதிய மருத்துவக் கல்லூரிக்காக விண்ணப்பிக்கப்பட்ட 37 தனியார்
கல்லூரிகளும், 31 அரசுக் கல்லூரிகளும் என மொத்தம் 68 கல்லூரிகளின்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும். மருத்துவக் கல்வியின் தரத்தை
உயர்த்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள்
மேற்கொண்டுவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.