
சென்னையில், தனியார், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை, நேற்று, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறையை, எந்த எதிர்க்கட்சியும் விமர்சனம் செய்யவில்லை. பள்ளிக் கல்வியில், பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசின் சார்பில், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைக்கப்படும். இவற்றில் பயிற்சி வழங்க, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, விரைவில் துவக்கி வைப்பார்.பட்டய கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வுக்கான பயிற்சி, 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும். தமிழகம், கல்வியில் பிரகாசமான மாநிலமாக உருவெடுக்க, தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிளஸ் 2 மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு, புதிதாக, 12 பாடங்கள் இணைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில், இவை சேர்க்கப்படும். பள்ளிக் கல்வி துறையின் செயல்பாடுகளுக்கு, நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்ததற்கு, அரசின் சார்பில் நன்றி.








