தமிழகத்தில் 1.6 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர் என்று
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த
சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு சீருடை மாற்றப்பட்டதால்,
மாணவர்களின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்து
நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை தமிழக அரசே இலவசமாக வழங்கும்.
தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்
ஏற்படுத்தப்படும். ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை வகுப்பறைகள்
கணினிமயமாக்கப்பட்டு இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
எதிர்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் செயல்பாடு
இருக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் 80 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்.
தமிழகத்தில் 1.6 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், 3 லட்சம் பட்டதாரிகளும்
வேலையின்றி உள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் பிளஸ்-2வில் தேர்ச்சி
பெற்றவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கல்வி முறை செயல்படுத்தப்பட்டு
வருகிறது
நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 1000
மாணவர்கள் நிச்சயம் தகுதி பெறுவர். அடுத்த மாதம் 412 மையங்களில் நீட்
தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்
பேசினார்
1932 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
ஈரோட்டில் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறும்போது, `தமிழக அரசு
பள்ளிகளில் காலியாக உள்ள 1932 ஆசிரியர் பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர்
கழகம் சார்பில் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு
பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்
நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த விதிமுறையை பின்பற்றக்கூடாது
என்றும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உடற்கல்வி ஆசிரியர்கள்
நியமிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதித்துறை
செயலரிடம் ஆலோசித்து அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்’
என்று கூறினார்.







