திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை
பயிலும் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற செப்.30-ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்,
கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச்
சார்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19 ஆம் கல்வியாண்டில்
ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு
கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை
(ஐடிஐ, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்
படிப்பு, இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்குப்
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும்
தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்குத் தகுதி மற்றும் வருவாய்
அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மத்திய அரசின்
www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை
இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







