ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அழைப்பு
இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு,
'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு
வாடிக்கையாளர்களுக்கு பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
இதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை
அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை 'ஸ்கிம்மர்' கருவி மூலம் நகல் எடுத்து
மோசடியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 'சிப்' அடிப்படையில் கார்டுகளை
வழங்குமாறு ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால்,
வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.
இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக செயல்படுத்த எஸ்பிஐ முடிவு
செய்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள பதிவில்,
'அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி நமது வங்கியின்
டெபிட் மற்றும் ஏடிஎம் அட்டைகளை 'சிப்' தொழில்நுட்பத்தில் மாற்ற
இருக்கிறோம். வாடிக்கையாளார்கள் தங்கள் அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகளை
மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இதற்கு இந்த ஆண்டு
இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும் புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம் கார்டுகள்
வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பகுதி ஏற்கெனவே
சிப் தொழில்நுட்பத்தில் உள்ளது. இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப்
தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ மட்டுமல்லாது அனைத்து வங்கிகளுமே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு
அம்சங்களுடன் கூடிய புதிய அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.







