அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நடைமுறைகளைப் பின்பற்றாமல்
வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் செல்லுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஏஐசிடிஇ நடைமுறைகளைப்
பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் வழங்கப்படும் கலை-அறிவியல்
பட்டப் படிப்புகள் அனைத்தையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
கட்டுப்படுத்துகிறது.
பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். போன்ற பொறியியல் படிப்புகளையும்,
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற தொழில் படிப்புகளையும் அகில இந்திய
தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைக்
கல்வி நிறுவனப் படிப்புகளையும் யுஜிசி கட்டுப்படுத்தி வருகிறது என்றபோதும்,
தொலைநிலைக் கல்வி நிறுவங்கள் மூலம் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.
படிப்புகளுக்கும் ஏஐசிடிஇ நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது
விதியாகும்.
ஏனெனில், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்த பின்னர் தொலைநிலைக் கல்வி
வழியாக பெறும் இளநிலை பட்டப் படிப்பும், அதன் பிறகு பெறப்படும் முதுநிலைப்
படிப்புகளும், கல்லூரிக்குச் சென்று பெறப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்
படிப்புகளுக்கு இணையானது. அரசுப் பணிகளுக்கும் இந்த தொலைநிலைக் கல்வித்
தகுதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படப்புக்கான நடைமுறை என்ன? அந்த வகையில், ஏஐசிடிஇ
வழிகாட்டுதலின்படி எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் ஏதாவது ஒரு
நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
தொலைநிலைக் கல்வி வழியில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளுக்கும்
இது பொருந்தும். அது மட்டுமின்றி ஏஐசிடிஇ.யின் அனைத்து நடைமுறைகளும்
பின்பற்றப்பட வேண்டும்.
அவ்வாறு நடைமுறைகளைப் பின்பற்றப்படாமல் வழங்கப்படும் படிப்புகள்
அங்கீகரிக்கப்படாது. இதனால், மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர் என்கின்றனர்
பேராசிரியர்கள்.
நடைமுறைகளைப் பின்பற்றாத பல்கலைக்கழகங்கள்: தமிழகத்தில் அண்ணா
பல்கலைக்கழகம் இந்த நடைமுறையை முறையாகப் பின்பற்றுகிறது. தொலைநிலை கல்வி
முறையில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் நுழைவுத் தேர்வு
மூலமே மாணவர்களைச் சேர்க்கிறது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் எந்தவொரு
நுழைவுத் தேர்வும் நடத்தாமலேயே, வெறும் இளநிலை பட்டப் படிப்பு தகுதியின்
அடிப்படையில் தொலைநிலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர்
சேர்க்கையை நடத்தி வருகின்றன.
செல்லுமா? இவ்வாறு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள்
சார்பில் வழங்கப்படும் படிப்புகளால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர்
என்கின்றனர் பேராசிரியர்கள். இது குறித்து யுஜிசி முன்னாள் துணைத் தலைவர்
தேவராஜ் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறியது:
தொலைநிலைக் கல்வி முறையில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.
படிப்புகளுக்கு ஏஐசிடிஇ நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இது
தொடர்பாக யுஜிசி சார்பில் பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்துக்கும் அறிவுறுத்தல்
வழங்கப்பட்டது என்றனர்.
இது குறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே "தினமணி'-க்கு அளித்த
பேட்டி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட
பல்கலைக்கழகங்களும், உயர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களும்
அவர்களாகவே தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை
தொடங்கி நடத்திக்கொள்ள அனுமதி உள்ளது.
ஆனால், அந்தக் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ நடைமுறைகளையும், தர
நிர்ணயத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது அனைத்துக் கல்வி
நிறுவனங்களும் ஒரே சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஏதாவது
ஒரு அங்கீகரிக்கப்பட்ட நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட
வேண்டும்.
அது மட்டுமின்றி, இந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி
அனுமதியைப் பெறுவதற்கு முன்பாக, ஏஐசிடிஇ நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கான
உறுதிமொழிப் பத்திரத்தை ("அஃபிடவிட்') யுஜிசி-யிடம் தாக்கல் செய்வதும்
கட்டாயம்.
நடைமுறைகளை பின்பற்றாவிட்டால்... அவ்வாறு, ஏஐசிடிஇ நடைமுறைகள்
பின்பற்றப்படாமல் தொலைநிலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் வழங்கப்படுவது
தெரிய வந்தால், அதுதொடர்பாக ஆய்வு நடத்தி அனுமதியை ரத்து செய்யுமாறு யுஜிசி
கேட்டுக்கொள்ளும்







