வினாத்தாள்
அச்சடிப்புக்கான, மாவட்ட அளவிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது. மாநில
அளவில், 'டெண்டர்' விடப்பட்டு, அச்சகத்தை தேர்வு செய்ய, பள்ளி கல்வித்துறை
முடிவு செய்து உள்ளது.
தமிழகத்தில், மாநில அரசு துறை திட்டப் பணிகளை, தனியாரிடம் வழங்கினால்,
அதற்கு, 'டெண்டர்' முறையை பின்பற்ற வேண்டும். ஆனால், பள்ளி
கல்வித்துறையின், மாவட்ட அளவிலான பணிகளுக்கு, டெண்டர் விடாமல், முதன்மைக்
கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களே, தனியார் நிறுவனத்தை தேர்வு
செய்கின்றனர்.இந்த வகையில், பருவ தேர்வு, இடைநிலை தேர்வு, காலாண்டு மற்றும்
அரையாண்டு தேர்வுக்கு, வினாத்தாள், கையேடுகள் அச்சடித்தல் போன்ற பணிகள்,
சி.இ.ஓ,,க்கள் வழியாக, தனியார் அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆனால்,
சி.இ.ஓ.,க்கள் ஒப்பந்தம் செய்யும், பல அச்சகங்கள், விதிகளை
பின்பற்றுவதில்லை; அச்சு கூலியும் அதிகமாக வசூலிக்கின்றன என, புகார்
எழுந்துள்ளது. அதனால், மாணவர்களிடம் வசூலிக்கும் தேர்வு கட்டண நிதி,
தேவைக்கு அதிகமாக செலவிடப்படுகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில்,
மாவட்ட அளவில் அச்சடிக்கப்பட்ட, அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாளும்,
முன்கூட்டியே, 'லீக்' ஆகியுள்ளது.இது, பள்ளி கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அச்சகங்களில், ரகசிய தன்மை காக்கப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, இந்த பிரச்னையை சமாளிக்க, இனி, மாநில அளவில் டெண்டர் விட்டு, அச்சகங்களை முடிவு செய்ய, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதனால், சி.இ.ஓ.,க்கள், தன்னிச்சையாக வழங்கிய, அச்சக ஒப்பந்தங்கள், விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன.







