திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியுடன் இணைந்து 'என் கனவு' கடிதம் எழுதிய 10 சிறந்த மாணவிகள் ஒரு நாள் களப் பணியில் ஈடுபட்டனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு 'என் கனவு' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், சிறந்த 10 மாணவிகளாக ஜெயபிரியா, மணிமேகலை, சமீனா, அனுசுயா, அபி, பாத்திமா பீவி, இசைவாணி, மேகனா, பிரியா மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், அனைவரும் நேற்று ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, அவர்களுடன் ஆட்சியர் கலந் துரையாடினார். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப் போது மாணவ, மாணவிகளுடன் அவர் பேசும்போது, "நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து, சிறந்த பள்ளி என்ற பெயரை இந்த பள்ளிக்கு பெற்றுத்தர வேண்டும்" என்று கூறி விடைபெற்றார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில், ஆட்சியருடன் இணைந்து 10 மாணவிகளும் களப்பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைகள், மக்களுக்கான தேவைகள் குறித்து கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்து மாணவர்கள் குறிப்பு எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதாப், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆட்சியருடன் இணைந்து களப்பணியில் ஈடுபட்ட மாணவிகள் கூறும்போது, "எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. மக்களின் தேவைகளை அறிந்து, அதனை நிறைவேற்றித் தருவது என்பது ஆட்சியரின் மகத்தான பணி என்பதை அறிந்துக் கொண்டோம்.நாங்களும் நன்றாக படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய் வோம்" என்றார். ரூ.60 லட்சம் மோசடி ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திருவண்ணாமலை அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, "எங்கள் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மனைவி பிரேமா என்பவர் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம், எங்கள் கிராமம் மட்டும் இல்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் சீட்டுப் பணம் கட்டியுள்ளனர்.
அதில், பலருக்கு அவர் பணத்தை திருப்பித் தரவில்லை. மேலும், சீட்டு கட்டியவர்களிடம் பணத்தைக் கொடுக்காமல், அந்த பணத்துக்கு வட்டி தருகிறோம் என்று கூறி காலம் கடத்தி வந்தார். இதுவரை 75-க்கும் மேற்பட்டவர் களுக்கு சுமார் ரூ.60 லட்சம் வரை கொடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த பிறகு விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும், அவர் பணத்தை திருப்பித் தரவில்லை. கடந்த 6 மாதங்களாக அவர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான வீட்டை, அவரது உறவினர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.







