சென்னை:
பழைய
ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த
மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை
தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி
வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும்
எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை. மேலும், ஆசிரியர்கள்
மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு
கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட்
நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று
அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ
நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என
தெரிவித்துள்ளது. #JactoGeo







