அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகைப்பதிவு (பயோமெட்ரிக்) முறை
அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில்
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் அதிகாரிகள்
திடீர் சோதனையில் ஈடுபட்ட போது, ரேஷன் பொருட்கள் முறைகேடாக விற்கப்பட்டது
தெரிய வந்தது. இதனால் அங்கு பணியாற்றிய கீதா என்ற ஊழியரை, உணவு வழங்கல்துறை
அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கீதா சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதிடி.கிருஷ்ணகுமார்
முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, நியாய
விலைக்கடைகளில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து பதிலளிக்க
உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று கூட்டுறவு சங்கங்களின்கூடுதல் பதிவாளர்
சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 909 நியாய விலை
கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப்
பொருத்துவது குறித்து கூட்டுறவு சங்கங்களிடம்ஆலோசனை நடத்திய பின்னர்
அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று குறிப்பிப்பட்டிருந்தது.
பின்னர்தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாக
இயக்குநர் எம்.சுதாதேவி தாக்கல் செய்த அறிக்கையில்,தமிழகத்தில் சிவில்
சப்ளை கார்ப்பரேஷன் சார்பில் நடத்தப்படும் 1455 கடைகளில் 20 கோடியே 79
லட்சத்து 92 ஆயிரத்து 250 ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள்
அமைக்கப்படும்.தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும்
நியாயவிலை கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த 97 கோடி செலவாகும் என்று
கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நியாயவிலை கடைகளில் முறைகேடுகளை முற்றிலும்
தடுப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதிவான பயோமெட்ரிக் முறை
கொண்டு வருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு குடும்ப அட்டையில்
உள்ள ஏதாவது ஒரு நபர் கைரேகையைப் பதிவு செய்தால் போதுமானது. இதன் மூலம்
முறைகேடுகள் முற்றிலும் களையப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறித்துஉணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை மார்ச் 11ம் தேதிக்கு நீதிபதி
ஒத்தி வைத்தார்.







