பிள்ளைகளின்
அறிவுத் திரியில்
தீபமேற்ற ஏதாயினும்
திட்டம் செய்யும்
மாணவனுக்கு
எது வருமோ
அதைக்
கற்றுக் கொடுக்கும்
அனைவரும்
சமம் என்பதை
பாேதிக்கும்
மாணவனை
மனப்பாடம் செய்யும்
ஏடிஎம் ஆக்காது
புரியும்படி
சொல்லிக் கொடுக்கும்...
புரியும்வரை
சொல்லிக் கொடுக்கும்
மாணவன்
நதி மாதிரி
அவன் போக்கில் விடும்
சுய சிந்தனை
வளர்த்தெடுக்கும்
தேசத்தைக்
காதலிக்க
மக்களை
அன்பு செய்யச்
சொல்லிக் கொடுக்கும்
எல்லோர்க்கும் எல்லாம்
என்கின்ற சூழல் வளர்க்கும்
சமூகத்தை நேசிக்கக்
கற்றுக் கொடுக்கும்
பண்பாடு கலாச்சாரம்
பந்தி வைக்கும்
பாலின சமத்துவத்தை
பரிந்துரைக்கும்
மாணவன்
பச்சை மூங்கில்
புல்லாங் குழல்களாக்கும்
மாணவன்
வெறும் நதிதான்
அவனை
கடல் சேர்க்கும்
இந்தச் சமூகம்
பயன்படும்படி
பலம்படும்படி
வளம்படும்படி
நலம்படும்படி......
காதலை
உணர்வினை
கலைகளை
உறவினை
ஈதலை
புரத்தலை
இயற்கையை
ரசித்தலை
வாழ்தலை
கற்று வைக்க
வாழ்க்கையில்
பற்று வைக்கச்
சொல்லிக் கொடுக்கும்.
உங்களைப் போலவே
கனவுப் பள்ளியாக
என்பள்ளியை
மாற்ற
காத்திருக்கும்
ஆசிரியன்
சீனி.சந்திரசேகரன்








