ஒரு காலத்தில் வேலை இல்லாதவன் வாத்தியார் வேலைக்கு வந்தான் என்று சொல்வார்கள். ஆனால் அந்த சொலவடையை இன்றிருக்கும் ஆசிரியர் சமூகம் மாற்றிக்காட்டி இருக்கிறது.
இதை ஒரு தவமாக, பணியாகக் கண்டு, லட்சியமாகக் கண்டு ஆசிரியர்களான பல தோழமைகளை நேரில் பார்த்திருக்கிறேன்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்ற காரணத்திற்காக பள்ளிகளை மூடுவது என்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துகின்ற கதை.
இருக்கும் பள்ளிகளின் தரத்தையும், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி, தரமான கல்வியை கொடுத்தால் ஏன்யா பள்ளிகளை மூடும் நிலை வரப்போகிறது?
இதற்கு பட்டதாரி ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமில்லை. அதே சம்பளம் தருவோம் ஆனால் பட்டதாரி ஆசிரியராக இருப்பவர்களை இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்வோம் என முடிவெடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
பட்டப்படிப்பு படித்து, பிஎட் படித்து டெட் தேர்வு எழுதி, பல தடைகளைக் கடந்து ஆசிரியர் ஆனால், அவர்களை பணியிறக்கம் செய்வது அரசின் அடாவடி செயல் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி பணி இறக்கம் செய்தால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். அது அவர்களின் பணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். இது போன்று இன்னும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன...
பணியில் ஒழுங்கின்மை, பணி செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் பணி இறக்கம் எனும் தண்டனை கொடுப்பார்கள்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அரசுக்கு இளைத்தவன் அரசுப்பள்ளி ஆசிரியன்தானா?
ஆசிரியர் சமூகத்தை போற்றி வளர்த்தால்தான், நாளைய நமது சமூகம் கல்வியறிவு பெற்று நிமிர்ந்து நடைபோடும். பின்லாந்தில் ஆசிரியர்களுக்குத்தான் அந்நாட்டில் முதலிடம்
ஆசிரியர் சமூகத்தை மதிக்க வேண்டாம். மிதிக்காமல் இருங்க... இந்த முடிவை உடனடியாக ரத்து செய்யுங்கள். ஆசிரியர்களை கௌரவமாக நடந்துங்கள்...
மோ.கணேசன், பத்திரிகையாளர்.
16.07.2019. 11.32 AM