மனிதர்கள் தனித்துவமானவர்கள். ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களிடையே கூட ஏராளமான வேறுபாடுகள் இருக்கும். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் தனித் தனி. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே மறைந்திருக்கிறது.
ஒரு நிகழ்வுக்கு இரு மனிதர்கள் இரு விதமாகத் தான் எதிர்வினையாற்ற முடியும். ஒரு வினைக்கு மற்றவர் எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை ஒருவரும் துல்லியமாக கணிக்க முடியாது. இதில் தான் மனித வாழ்க்கையின் அழகியல் மறைந்திருக்கிறது.
தொழில் வேறு. வாழ்க்கை வேறு.
தொழில் செய்யுமிடத்தில் நடிக்கவும் செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற சில முகபாவங்களை மட்டுமே காண்பிக்க வேண்டும். அப்படியில்லையென்றால் வேலை போய்விடும் இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் போய் விடுவார்கள்.
யூகிக்கக்கூடிய பதில் என்பது தொழில்முறையின் ஒரு பகுதியாகும். அதை தொழிலாக செய்பவர்களிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
நிஜ வாழ்க்கை என்பது தொழில் அல்ல. அது உணர்வோடு சம்மந்தப்பட்டது. மகிழ்ச்சி இருக்கிற அளவுக்கு வலியும் இருக்கும். வலிக்கும் போது சிரிக்க முடியாது. மழை விவசாயிக்கு மகிழ்ச்சியையும் உப்பு விற்பவனுக்கு வருத்தத்தையும் கொடுக்கிறது. ஒரே நிகழ்வு இரு உணர்வுகளை இருவருக்கு கொடுக்கலாம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை மகிழ்ச்சியோடு இருப்பவர்களிடம் தான் எனக்கு பேசப் பிடிக்கும். அழுத முகங்கள், சோர்ந்து போய் இருப்பவர்கள், சோகப்பாடல்கள் கேட்பவர்கள் இவர்களை பெரும்பாலும் தவிர்க்கப் பார்ப்பேன். என்னைச் சுற்றியிருப்பவர்களின் வலிகளில் பங்கு கொள்ளாமல் தவிர்த்திருக்கிறேன். வலி என்பது பொய். நாமாக உருவாக்கிக் கொள்வது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. இப்போதும் அதே எண்ணம் எனக்குள் இருக்கிறது என நினைக்கிறேன். இப்போது இது தவறான எண்ணம் என்று தான் தோன்றுகிறது.
ஒருவர் வாழ்க்கையில் ஏர் ஹோஸ்டஸ் மாதிரி எப்போதும் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள தூண்டுதல்களுக்கு ஒரே விதமான துலங்கலை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வித விதமான தூண்டுதல்களுக்கு விதவிதமான துலங்கல்களே சரியானது.
வலிகள் நாம் உருவாக்கிக் கொளவதல்ல. வலிகளும் வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்க வேண்டிய ஒன்று தான்.
புன்னகையை விட கண்ணீரே சிறப்பானது.
யாருக்கு வேண்டுமானாலும் புன்னகையை சிந்தி விடலாம்.
மனதுக்கு அருகில் இருப்பவர்களிடம் மட்டுமே கண்ணீரை சிந்த முடியும்.









