தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் அ.சங்கர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோராகஉள்ளனர்.
அவ்வாறு பணியில் இளையவர் என்றாலும் இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவலில் ஈடுபடுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் வாய்மொழி உத்தரவுக்கிணங்க முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடைநிலை ஆசிரியர்களை மாதிரி பள்ளிக்கு பணி நிரவல் என்ற முறையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து மாற்றுப் பள்ளிக்கு கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் மற்றும் 100 கிலோ மீட்டர் தொலைவில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செப்டம்பர் 19-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஓரிரு நாள்களில் பிரச்னையை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை உத்தரவை ரத்து செய்யவில்லை.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெற்று வந்த பதவி உயர்வு கலந்தாய்வும் இரண்டுஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய பணி நிரவல் மாற்றுப் பணி நியமன ஆணையை ரத்து செய்து மீண்டும் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே ஆணை வழங்கவேண்டும். இந்த கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.








