குறிப்பிட்ட ஒரு சொத்தை வாங்க
விரும்புபவர்களுக்கு சம்பந்தப்பட்ட சொத்தின் மீதான பாத்தியதை அதன்
உரிமையாளருக்கு எவ்வாறு கிடைத்தது என்று அறிந்து கொள்வது அவசியம்.
பூர்வீக சொத்து வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகள்
உள்ளிட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு
சொத்தை வாங்க விரும்புபவர்களுக்கு சம்பந்தப்பட்ட சொத்தின் மீதான பாத்தியதை
அதன் உரிமையாளருக்கு எவ்வாறு கிடைத்தது என்று அறிந்து கொள்வது அவசியம்.
அப்போதுதான், பிற்காலத்தில் எவ்வகையில் சொத்து சம்பந்தமான உரிமையியல்
பிரச்சினைகள் எழலாம் என்பதை அறிந்து கொள்ள முடிவதுடன், அதன் அடிப்படையில்
எச்சரிக்கையாகவும் செயல்பட முடியும் என்று ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர்.
சட்ட ஆலோசனை
பெருநகரங்களில் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்க:ள் என்பதே
தெரியாத நிலையில் குறிப்பிட்ட சொத்து அல்லது அதன் உரிமையாளர் பற்றிய
தகவல்களை சுலபமாக அறிந்து கொள்ள இயலாது. அதனால், சொத்தைப் பொறுத்த அனைத்து
ஆவணங்களையும், தகுந்த ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகரிடம் அளித்து, அவரது
ஒப்புதலைப் பெற வேண்டியது மிக அவசியம்.
சொத்தின் மீது உரிமை
பெரும்பாலான நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்ப அங்கத்தினர்களில்
ஓரிருவர், உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக
குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டு பலகாலம் வெளியூரில் அல்லது
உள்ளூரிலேயே வாழ்ந்து வரக்கூடும். அதுபோன்ற சூழலில் சம்பந்தப்பட்ட
குடும்பத்துடன் தொடர்புகள் இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட சொத்தின் மீது
அவர்களது தனிப்பட்ட உரிமைகளை சட்டப்படி யாரும் மறுக்க முடியாது.
சில நிலைகளில், பூர்வீக சொத்துக்களை குடும்ப ரீதியான செலவுகள் அல்லது
பிரச்சினைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள்
விற்பனை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய ஒரு அசையாச் சொத்து
விற்பனை செய்யப்பட்ட செய்தி பிரிந்து சென்ற குடும்ப அங்கத்தினருக்கு
காலப்போக்கில் தெரிய வரலாம். அதுபோன்ற சூழ்நிலையில் அவர் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் சொத்து வாங்கியவருக்கு சட்ட ரீதியான பல சிக்கல்களை
ஏற்படுத்தும்.
பெண்களுக்கும் சொத்துரிமை
குறிப்பாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டு, கணவன்
வீட்டில் இருந்தாலும், குடும்ப சொத்தின் மீது அவருக்கு சட்டப்படி உரிமை
உள்ளது. திருமணமான, பெண்களை கணக்கில் கொள்ளாமல், ஏதாவது காரணத்துக்காக, ஒரு
குடும்பத்தின் மூதாதையர் சம்பாதித்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டால்,
அதை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக செயல் பட வேண்டும். அந்த நிலையில்,
சம்பந்தப்பட்ட பெண் அங்கத்தினருடன் கலந்து பேசி, அவரிடமிருந்து ஒப்புதல்
பத்திரம் (Deed of Consent) எழுதிக் கொள்வதன் மூலம் சட்ட ரீதியான சிக்கல்
களைத் தவிர்க்க இயலும்.
மைனர் சொத்துக்கள்
ஒரு சில குடும்ப சொத்துக்கள் விற்கப்படும் காலத்தில் மைனர் வாரிசாக
இருந்தவர்களுக்கு பதிலாக தந்தை, தாய் அல்லது நெருங்கிய உறவினர் ஆகியோர்
கார்டியனாக இருந்து விற்பனை பத்திரத்தில் கையெழுத்து போட்டிருக்கலாம்.
சிறிது காலத்துக்கு பின்னர், சொத்தின் மைனர் வாரிசு மேஜர் ஆகும் நிலையில்,
அவர் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. மைனர்
சொத்துக்களை நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே வாங்க வேண்டும். தெரியாமல்
வாங்கிய நிலையில் மேஜர் உரிமையாளர் மூலம் ஒப்புதல் பத்திரம் எழுதிப் பதிவு
செய்து கொண்டு சிக்கல்களைத் தவிர்க்கலாம்.