வீட்டு மனை - நிலம் வாங்குவதற்கு முன்னர்..
புதிய ஏரியாவில் நிலம் அல்லது மனை
வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் வில்லங்க விவகாரங்கள்
இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன் அடிப்படையில், வழக்கறிஞர்
அல்லது ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர் ஆகியோரிடம் ‘லீகல் ஒப்பீனியன்’
பெற்று, அதன் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வது வழக்கம்.
ஒரு அசையா சொத்தை வாங்க விரும்புபவர், சம்பந்தப்பட்ட சொத்தின் மீதான
வில்லங்க சான்றை குறைந்தபட்சம் 35 ஆண்டுகளுக்காவது பெற்று அதன் நிலையை
தெரிந்து கொள்வது முக்கியம். அவ்வாறு வில்லங்கம் பெறப்பட்ட பிறகும் சொத்து
பற்றிய சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட தாலூக்காவில் சொத்து அமைந்துள்ள
கிராமத்திற்கான ரீ-சர்வே அன்டு செட்டில்மெண்டு ரெஜிஸ்டர் (Resurveyand
Settlement Register) தகவல்களை ஆரம்பத்திலிருந்து கவனித்து அறிந்து
கொள்வதும் பாதுகாப்பானது.
வாங்க திட்டமிட்ட மனை அல்லது இடத்திற்கு அருகில் ‘ஏரியல் வியூ’ அமைப்பில்
அரசு சாலை, பொது இடம் அல்லது அரசு நிலப்பகுதிகள் அமைந்திருக்கும் நிலையில்,
அரசு அவற்றை கையகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு
செயல்பட வேண்டும். அதாவது, சம்பந்தப்பட்ட மனை அல்லது இடம், தமிழக அரசு
மற்றும் மத்திய அரசு ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு
உட்படாமல் அதாவது பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம்.







