புதுடில்லி: அடுத்த கல்வியாண்டு முதல் இன்ஜினியரிங் படிக்க பிளஸ்2வில் வேதியியல் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.
இந்தியாவில் இன்ஜி., படிப்புகளில் சேர, சில மாற்றங்களை செய்து ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. அதன்படி, இன்ஜி., படிப்பில் சேர அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் பிளஸ் 2வில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்துடன் சேர்த்து ஏதேனும் விருப்பப்பாடத்தை சேர்த்து படித்திருந்தால் போதும். அதாவது, மேற்கூறிய இரு பாடத்துடன் வேதியியல், பயோடெக்னாலஜி, உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் பயிற்சி, வேளாண்மை, பொறியியல் கிராபிக், வணிக ஆய்வுகள் ஆகிய விருப்பப்பாடங்களில் ஒன்றை சேர்த்து படித்திருந்தாலே இன்ஜி., படிப்புகளில் சேரலாம்.
இது குறித்த அறிக்கையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இன்ஜி., கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஏஐசிடிஇ அதிகாரி கூறுகையில்; இந்த மாற்றங்களால் இன்ஜி., படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ (மெயின்) தேர்விலும் இதற்கான மாற்றம் செய்யப்படும், என்றார்.










