◦ வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
வைத்தூறு போலக் கெடும்
மனிதகுலம் இதுவரை காணாத மிகப்பெரிய சோதனைக்காலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாடுகள், மொழிகள், இனங்கள், தகுதிகள், வசதி வாய்ப்பு, வயது, எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து ஊழித்தீயாய் கொடுங்கரம் ஒன்று நீண்டு, மனித இனத்தை அதன் அறிவு, விஞ்ஞான, மருத்துவ வளர்ச்சியை மீறி மெல்ல கபளீகரம் செய்து கொண்டு வருகிறது. அச்சம் தரும் அமைதி, எங்கெங்கும்.
உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு, இதுவரை கேட்டிராத அளவில். மருத்துவமனைகளும், மருத்துவ கருவிகளும் போதவில்லை என்னும் அளவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. வளர்ச்சி அடைந்து, வசதிகளின் உச்சத்தில் இருந்த நாடுகள் துவண்டு, தளர்ந்து கையைப் பிசைந்து கொண்டு உயிர் போன உடல்களை அப்புறப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதிலும் , மிச்சமிருப்போரை இக்கொடு நோய் தொட்டுவிடாமல் பத்திரப்படுத்துவதற்கும் படாதபாடு படுகின்றனர். கடந்த காலங்களில் பல போர்கள் பல்லாயிரக்கணக்கில் உயிர்களை பலி கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின்போது கோடிக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்த அவலங்கள் மனிதனால் அரங்கேற்றப்பட்டவை. அழிவைத் தடுத்து நிறுத்தும் பொத்தான் ஒன்று யார் கரத்திலோ இருந்தது. முடிவு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கைக்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்தன. பாதிப்புகள் ஏராளம் என்றாலும் தீர்வு என்பது மனிதர்களிடமே இருந்தது
ஆனால் இப்போதோ கண்ணுக்கு புலப்படாத கருணையற்ற எதிரி, தீர்வு தெரியாத அவலம், என்ன நடக்குமோ என்ற சஞ்சலம் எல்லோர் மனத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நேரமும். நோய் தாக்கப்பட்டவருக்கு அருகில் அக்கறையோடு இருந்து பராமரிக்க உறவினருக்கு வாய்ப்பு இல்லை. பார்வையாளர்கள் வந்து பக்கத்தில் நின்று தேறுதல் சொல்ல வழியில்லை. தனிமை மட்டுமே துணை! மனதில் கொள்ளுங்கள் தயைகூர்ந்து, எத்துணை பெரிய செல்வந்தராக, புகழ்பெற்ற மனிதராக இருந்த போதும் இறந்தவர்களை மரியாதை செலுத்தி கூட்டமாக அனுப்பி வைத்த சம்பிரதாயங்களை இந்த நோய் அனுமதிக்கவில்லை. அழுது ஆர்ப்பரித்த கூட்டமில்லை. அனாதையைப் போல், யாருமற்ற, ஏதுமற்றவர்களைப் போல் இதில் பாதிக்கப்பட்டவர்கள் முகம் தெரியாத மூட்டையாகப் போவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது நெஞ்சைப் பிசைகிறது. வேதனையை வெளிப்படுத்த முடியாமலும், பதைபதைப்பில் இருக்கும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வழியின்றியும் , உலகத்தையே வென்றதாய் மார்தட்டிய மனிதக்கூட்டம், எல்லாம் தனக்குக்கீழ்தான் என்று இறுமாந்திருந்த நாடுகள், ஒட்டு மொத்தமாய் தலை கவிழ்ந்து கைபிசைந்து கொண்டிருக்கும் காலகட்டம்.
கண்ணுக்குத் தெரிந்து மருந்தும் இல்லை. தீர்வுமில்லை. கவலை குறைந்திட வாய்ப்புமில்லை. ஒரேவழி, ஒரேயொரு வழி - சிலநாட்கள் மட்டும் - நிலைமை கட்டுக்குள் வரும்வரை, நோயின் வீரியம் குறையும்வரை, மனிதஅறிவு மாற்று ஒன்று கண்டுபிடிக்கும்வரை, வெளியில் நடமாடாமல் கட்டுப்பாடு காத்து வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு கிடைத்தவற்றையும், இருப்பனவற்றையும் நேர்த்தியாக, சிக்கனமாக பயன்படுத்தி நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கும், அறிவியலுக்கும் துணைநின்று ஒத்துழைப்பது ஒன்று மட்டுமே!
முடியவில்லை எனக் கருதும் சிலரின் சிந்தனைகட்கு -
° இன்றும் கூட பல பேர், தங்க இடமின்றி, அடிப்படை வசதிகள் இன்றி, அன்றாடங்காய்ச்சிகளாய் அல்லலுறும் அவல நிலையுண்டு.
இன்றைய சூழலில், திரையரங்குகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வரவேற்பறையிலும், படுக்கை அறையிலும் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளின் மூலமும், அமேசான், நெட்பிளிக்ஸ் மூலமும் வரிசை கட்டி நிற்கின்றன. நண்பர்களை, உறவினர்களை காண இயலாதபோதும், வாட்ஸப், முகநூல், ட்விட்டர், வீடியோ காணொளிகளின் மூலமும், செல்லிடப்பேசிகளின் வாயிலாகவும் தொடர்பில் இருக்கிறோம். பெரும்பாலும் முன்பும் அப்படித்தான் பணியின் நிமித்தம் தொடர்புகள் இருந்தன. ஆனால் இப்போது கூட இதை ஏற்க மறுத்து எத்தனை நாள் இந்தத் தடை என்று ஆதங்கப்படும் குரல்கள்.
◦ இளைஞர்கள் சிலர், தடுக்கும் காவல்துறையினருக்கு கட்டுப்பட மறுத்தும், அவர்களையே எதிர்த்துத் தாக்கியும், தெருவில் நடமாட, வாகனங்களில் பவனிவர முயலும் காட்சிகளை சமூக வலைதளங்களில் காணநேர்ந்தபோது மனம் கனத்தது.
அவர்களின் கவனத்திற்கு...
நம்மை காத்துக்கொள்ள வேண்டி வீட்டில் இருக்க சொல்லும் அறிவரையினை புறந்தள்ளும் அன்பானவர்களே!
◦ நம்மை காப்பதற்காக, நமக்கு உதவியாக இரவு பகலின்றி உயிரை பணயம் வைத்து பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், அத்தியாவசிய தேவைகளை நமக்கு தரவேண்டி வாகனம் ஓட்டுவோர், நியாய விலைக்கடை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் இவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா? உறவுகள் இல்லையா? பச்சிளம் குழந்தைகளை வீட்டில் விட்டு வந்து பணியாற்றும் தாய்மார்கள் , மனைவி , மக்களை காத்திருக்கப் பணித்துவிட்டு வந்து பணியாற்றும் குடும்பத்தலைவர்கள், ஒரு பிள்ளையாய் பிறந்து பெற்றோரை பதைபதைக்க விட்டு ஆபத்து சூழ்ந்த நிலையில் பிள்ளைகள், கிடைத்ததை உண்டு நமக்காக உழலும் நிலையினை ஒருகணம் உணர்ந்து பாருங்கள்.
° வேலை பார்ப்பது பொருள் ஈட்டத்தான். ஆனால் இந்த சூழலில் பணியாற்றும் யாரும் சம்பளத்திற்காக பாடுபடவில்லை. பெரும் கடமையாக கருதி உயிரை பணயம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டோர் நிறைந்திருக்கும் நாட்டில் நம்முடைய பங்களிப்பு என்ன? இந்த மனிதகுல சோதனையை எதிர்கொள்ள நாம்செய்யப்போவது என்ன? தன் குடும்பம் மறந்து, தன் தேவைகள் துறந்து, தன்னலமற்று இன்னல்களுக்கிடையே பணியாற்றும் இந்த மனித தெய்வங்களுக்கு நாம் செய்யப்போகும் கைம்மாறு என்ன? காட்டப்போகும் நன்றி என்ன?
◦ ஒன்றும் வேண்டாம்! அமைதியுடன் அவரவர் இல்லத்தில் இருந்தால் போதும். ஐரோப்பிய நாடுகள் தத்தளிக்கின்றன. இந்தியா தப்பிப் பிழைக்க மெலிதான ஒரே நம்பிக்கைக் கோடு வருமுன் காப்பதுதான்! வெளியில் செல்வதை தவிர்ப்போம்!
◦ நாமெல்லாம் நம் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்களோடு ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இந்த உலகில் வாழ்ந்திட வேண்டும். வலம் வரவேண்டும். வளம்நிறைந்த வாழ்க்கையை எதிர்கால தலைமுறைக்கு தந்திட வேண்டும். கையெடுத்து கும்பிட்டு வேண்டுகின்றேன்! தயுசெய்து, தயவுசெய்து வீட்டுக்குள்ளேயே சிலநாட்கள் அடைகாக்கும் கோழியின் பொறுமையோடு காத்திருங்கள். பிள்ளைகளும் நீங்களும் பயனுள்ள வகையில் காலத்தைச் செலவழியுங்கள்!
◦ இதுபோன்ற ஒரு தனிமைப்படுத்தப்பட்டச் சூழலில் உருவான அழியாத நாடக காப்பியம்தான் ஷேக்ஸ்பியர் எழுதிய "கிங் லியர்” என்று கூறுவார்கள்.
◦ கட்டுப்பாடு காப்போம்!
◦ மனிதகுலம் காப்போம்!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...