அடிப்படையில் குழந்தை வளர்ப்பில் மூன்று வகைகள் உண்டு.
சில பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு என்பது ஆற்று நீரோட்டம் போன்றது. எவ்வித
ஆர்ப்பாட்டமும் இன்றி குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக அதன்
பாட்டில் நழுவிச் சென்று கொண்டிருக்கும். அவர்களது வாழ்வில் குழந்தைகள்
பிறப்பார்கள், வளர்வார்கள், படிப்பார்கள், வாழ்வார்கள். அதாவது இவ்வுலகில்
கோடானுகோடி யுகங்களாக மனிதர்கள் எப்படிப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து
காணாமல் போகிறார்களோ? அப்படியே தான் அவர்களது வாழ்வும் அமைதியாக
நடந்தேறும்.
அங்கு பெற்றோர்கள் எனப்படுபவர்கள் அவரவர் பெற்றெடுத்த குழந்தைகளின்
அடிமைகளாக இருப்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், அவர்களுக்கு
தங்கள் குழந்தைகள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இவர்கள்
பொறுக்க மாட்டார்கள் என்பதோடு சதா தம் குழந்தைகளைப் பாராட்டித் தள்ளிக்
கொண்டும் இருப்பார்கள். குழந்தை குப்புற விழுந்தால் பாராட்டு, குழந்தை
சிறுமியாகி ஸ்கிப்பிங் ஆடத் தொடங்கி விட்டால் அது இமாலய சாதனை. ஸ்கிப்பிங்
ஆடும் குழந்தை பள்ளியில் மாவட்ட அளவில் ஏதேனும் விளையாட்டுப் போட்டியில்
கலந்து கொண்டு பரிசு கொண்டு வந்தால் அது என்னவோ தேசிய விருது பெற்றது போல
ஊர் முழுக்க தண்டோரா போட வேண்டியது.
அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கொண்டாடி, பெரிது
படுத்திப் பேசி என் மகளாச்சே, என் மகன் போல வருமா? பப்பு, மிட்டு, செல்லம்,
வைரம், தங்கம், புஜ்ஜி என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சியே அவர்களை
குட்டிச்சுவர் பண்ணுவது.
இப்படியும் சில பெற்றோர்கள் இந்த உலகில் ஜீவித்திருக்கிறார்கள். இந்த
மூன்று வகைப்பெற்றோரில் முதலாம் வகைப் பெற்றோர் மட்டுமே நார்மலானவர்கள்.
மற்ற இரண்டு பிரிவினருமே தங்களுக்கே தெரியாமல் தங்கள் பிள்ளைகளின் வாழ்வைத்
தவறான வழிக்கு திசை திருப்புகிறார்கள்.
குழந்தைகளை இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் அம்மா,
அப்பாக்களுக்கு முக்கியமான பேரண்டிங் டிப்ஸ்கள். அதைப் பற்றி அனைத்துப்
பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.
1. உங்கள் குழந்தைகள் பிறக்கும் போது வெற்றுச் சிலேடுகளாகவோ அல்லது
எழுதப்படாத வெள்ளைத்தாள்களாகவோ பிறந்து விடவில்லை. நடத்தை மரபியல்
(Behavior Genetics) தத்துவத்தின் படி ஒரு குழந்தையின்ஆளுமையில் 50%
பிறவியிலேயே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. மிச்சமுள்ளதில் 40 % குணநலன்கள்
கலாச்சாரம், சக மனிதர்களுடனான பழக்க வழக்கங்கள், தாக்கம் உள்ளிட்டவறால்
கட்டமைக்கப்படுகின்றன. ஆக ஒரு குழந்தையின் ஆளுமையைக் கட்டமைப்பதில்
பெற்றோரின் பங்கு என்பது வெறும் 10% மட்டுமே என்றாகிறது. ஆனால், பெற்றோர்
நினைத்துக் கொள்கிறார்கள், தங்கள் குழந்தையின் முழு வாழ்வுக்கும் தாங்களே
பொறுப்பு என்பதாக நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பற்றியே சதா முழு நேரமும்
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வீணான வேலை. குழந்தைகளின் ஆளுமைத்
திறனில் வெறும் 10% பெற்றோர்களின் கையில் இருக்கிறதெனும் போது 100% தாங்கள்
தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவர்களைக் கையாள்வது தவறு.
2. இரண்டாவதாக நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்களால் இந்த உலகுக்கு
வந்தவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு மிக மிக அதிசயமானவர்களாகவும்,
அதி அற்புதமானவர்களாகவும், விலைமதிப்பற்றவர்களாகவும் கொண்டாட வேண்டிய
அவசியமில்லை. அவர்களை மற்றெல்லாக் குழந்தைகளையும் போல சாதாரணர்களாக வளர
அனுமதியுங்கள். உங்களது குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித
சாதனைகளையும் படைக்காத நிலையில் அந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு சின்னஞ்சிறு
செயலையுமே கூட பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கி அற்புதம் நிகழ்த்தப்பட்டு
விட்டதாக எண்ணச் செய்து தற்பெருமையில் திளைக்க அனுமதித்து விடாதீர்கள்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரம் குழந்தைகள் பிறக்கின்றனர்.
அவர்கள் அத்தனை பேரும் எப்படியோ அப்படித்தான் உங்களது குழந்தையும். உங்கள்
குழந்தைக்கென்று ஸ்பெஷலாக தேவதை இறகுகளோ அல்லது சாத்தானின் கொம்புகளோ
இல்லை. அதை பெற்றோரான நீங்களே உங்கள் அதீதமான பாராட்டுரைகளால் வரவைத்து
விடாதீர்கள்.
3. மூன்றாவதாக குழந்தைகளை வளர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்.
அதற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பலமணி நேரங்களை அர்ப்பணிக்கிறீர்கள்.
குழந்தைகளின் கல்வி, உணவு, பிற விருப்பங்கள், உடைகளுக்காக நீங்கள் உங்கள்
வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறீர்கள். அவர்களது தேவைகளை
நிறைவேற்றித் தருவதற்காக உங்களை கடுமையான உழைப்புக்கு உட்படுத்திக்
கொள்கிறீர்கள். இதற்கிடையில் வீடு மற்றும் அலுவலகங்களில் உங்களுக்கென
காத்திருக்கும் பிரச்னைகளையும் நீங்கள் நேர் செய்தாக வேண்டும். உங்களுக்கே
உங்களுக்கான பிரச்னைகளை மட்டுமல்ல பள்ளியிலும், வீட்டிலும் உங்கள்
குழந்தைகளுக்கு பிறரால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் கூட தீர்வு கண்டாக
வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகிறது.
4. கடைசியாக ஒரு வார்த்தை. உங்களது ‘பேரண்டிங் லட்சியம்’ என்னவாக
இருக்கிறது என்பது குறித்து யோசியுங்கள். ஒரு நல்ல அம்மா, அப்பா என்று
பெயரெடுத்தால் போதுமா? உங்களது குழந்தைகள் உலகத்திலேயே ஆகச்சிறந்த
குழந்தைகள் என்று பெயரெடுத்தால் போதுமா? உங்கள் லட்சியம் ஈடேறி விடுமா?
பிறகு மற்றதெல்லாம் தேவையில்லையா? ஒரு நிமிஷம் நின்று நிதானியுங்கள்.
உங்களது பிள்ளை வளர்ப்பின் எந்தெந்த தருணங்களில் எல்லாம் நீங்கள்
சந்தோஷமாக, மனநிறைவாக உணர்ந்தீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். அந்த
தருணங்களில் மட்டுமே நிஜமாக நீங்கள் வாழ்வை அனுபவித்திருப்பது உங்களுக்கே
புரியும். எனவே தயவு செய்து லட்சியம், பொறுப்பு, கடமை, என்ற வார்த்தைகளை
எல்லாம் புறக்கணித்து விட்டு உங்கள் குழந்தைகளுடன் நட்பாக இருக்கப்
பழகுங்கள். எல்லாக் குழந்தைகளுமே தங்களை நண்பர்களாகப் பாவிக்கும்
பெற்றோர்களையே மிகவும் விரும்புகிறார்கள். அது மட்டுமே இறுதிவரை உங்களைப்
பிணைக்கும் பாசக்கயிறாகிறது.
இந்த நான்கு விஷயங்களையும் மனதில் கொண்டு நாம், நம் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கினால் தேவையில்லாத பல சிரமங்களைத் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...